search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்- மீன்பிடிக்க செல்ல தயாராகும் ராமேசுவரம் மீனவர்கள்
    X

    வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்- மீன்பிடிக்க செல்ல தயாராகும் ராமேசுவரம் மீனவர்கள்

    • ராமேசுவரத்தில் மீன்பிடிக்க செல்ல தேவையான பணிகளை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
    • மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் மீன்பிடிக்க சென்றபோது 2 கட்டமாக 10 விசைப்படகுகள், 64 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். மீனவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதனை கண்டித்து ராமேசுவரம் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) மண்டபம் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்திருந்தனர்.

    இதனைதொடர்ந்து, நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் மீன்வளத் துறை அதிகாரிகள், மீனவ சங்க தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது வருகிற 8 மற்றும் 9-ந்தேதிகளில் ராமேசுவரம் மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். அப்போது அவர்களை விடுவிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், படகுகளை விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என அதிகரிகள் கேட்டுக்கொண்டனர்.

    இதனை ஏற்று வேலை நிறுத்த போராட்டம் மற்றும் ரெயில் மறியல் போராட்டங்களை மீனவர்கள் வாபஸ் பெற்றனர். இதைத் தொடர்ந்து ராமேசுவரத்தில் மீன்பிடிக்க செல்ல தேவையான பணிகளை மீனவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். நாளை (சனிக்கிழமை) மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×