search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கச்சத்தீவு அருகே மீண்டும் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: வலைகளை வெட்டி சேதப்படுத்தினர்
    X

    கச்சத்தீவு அருகே மீண்டும் ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: வலைகளை வெட்டி சேதப்படுத்தினர்

    • கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் 7 ரோந்து கப்பல்களை நிறுத்தி கண்காணிப்பது தெரியவந்தது.
    • ஒரு தரப்பினர் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து ஒவ்வொரு முறையும் மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது இலங்கை கடற்படை அவர்களை தாக்கி சிறை பிடிப்பதும், விரட்டியடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதன் காரணமாக ராமேசுவரம் மீனவர்களின் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று ராமேசுவரத்தில் இருந்து கடலுக்கு செல்ல 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்வளத்துறையிடம் இருந்து அனுமதி டோக்கன் பெற்றிருந்தது. நேற்று காலை முதல் 100-க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்கு புறப்பட்டு சென்றன.

    அப்போது கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையினர் 7 ரோந்து கப்பல்களை நிறுத்தி கண்காணிப்பது தெரியவந்தது. இதுகுறித்து கரையில் இருந்து கடலுக்கு செல்ல தயாராக இருந்த மீனவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதனால் 300 படகுகள் செல்ல வேண்டிய நிலையில் 50 விசைப்படகுகளில் மட்டுமே மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்களில் ஒரு தரப்பினர் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி ராமேசுவரம் மீனவர்களை தாக்கி விரட்டியடித்தனர். அதோடு மட்டுமல்லாமல் படகுகளில் இறங்கிய கடற்படை வீரர்கள் வலைகளை வெட்டி சேதப்படுத்தினர். தொடர்ந்து இந்த பகுதியில் மீன்பிடித்தால் சிறைபிடிப்போம் என இலங்கை கடற்படை எச்சரித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மீனவர்கள் மீன்பிடிப்பதை பாதியிலேயே நிறுத்தி விட்டு இன்று அதிகாலை ராமேசுவரத்திற்கு திரும்பினர்.

    இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக இலங்கை கடற்படை தாக்குதல் அதிகமாக உள்ளன. இதனால் மீன்பிடிக்க செல்ல அச்சுறுத்தல் ஏற்பட்டது. ஒவ்வொரு முறையும் கடலுக்கு செல்ல குறைந்தது ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்கிறோம். ஆனால் அதற்கு போதுமான பலன் கிடைப்பதில்லை.

    பல நேரங்களில் இலங்கை கடற்படை விரட்டியடிப்பதால் பாதியிலேயே திரும்ப வேண்டி உள்ளது. இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என வேதனையுடன் தெரிவித்தனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுட்டு மீனவர்களை விரட்டிய நிலையில் இன்று 2-வது முறையாக ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×