search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரவுடிகள் அட்டகாசம்-தொடர் கொள்ளை: பொன்னேரியில் 25-ந்தேதி வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம்
    X

    ரவுடிகள் அட்டகாசம்-தொடர் கொள்ளை: பொன்னேரியில் 25-ந்தேதி வியாபாரிகள் கடை அடைப்பு போராட்டம்

    • பொன்னேரி பஜார் பகுதியில் ரவுடிகளின் அட்டகாசம் தொடர்ந்து நீடித்து வருகிறது.
    • ஆலோசனை கூட்டத்தில் பொன்னேரி பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மது போதையில் ரவுடி கும்பல் ஏராளமான கடைகளை அடித்து உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.

    இதே போல் கடந்த வாரம் முட்டை கடை ஒன்றும் சூறையாடப்பட்டது. வியாபாரிகளை கத்தி முனையில் மிரட்டி பணம் பறிப்பதும் அதிகரித்து உள்ளது.

    இது பற்றி போலீசில் புகார் செய்தும் ரவுடி கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது. மேலும் புகார் செய்யும் வியாபாரிகளையும் குறி வைத்து ரவுடிகள் மிரட்டும் சம்பவம் நடந்து வருகிறது. இது தொடர்பாக போலீசாரி டம் வியாபாரிகள் கூறும் போது, கண்டு கொள்வதில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பொன்னேரி பஜார் பகுதியில் ரவுடிகளின் அட்டகாசம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

    கடைகளை குறிவைத்து திருட்டு சம்பவங்களும் அதிரிக்க தொடங்கி உள்ளன. எனவே ரவுடிகளை அடக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் பொன்னேரி நகர அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் அவசர ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் தலைவர் பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது.

    அப்போது, ரவுடிகளின் அட்டகாசம், கடைகளில் திருட்டு உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வியாபாரிகள் வலியுறுத்தினர்.

    மேலும் இதுபற்றி போலீசாரிடம் பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்காத போலீசாருக்கும் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் ரவுடிகள் அட்டகாசத்தை தடுக்க வேண்டும், பொன்னேரி பகுதி வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் மற்றும் ரவுடிகள் விஷயத்தில் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அனைத்து வியாபாரிகளும் ஒரு நாள் கடையடைப்பு மற்றும் பொன்னேரி பழைய பஸ் நிலையத்தில் உள்ள அண்ணாசிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் பொன்னேரி பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×