search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செங்கல்பட்டை சேர்ந்த இருளர்களுக்கு பத்மஸ்ரீ விருது- அமெரிக்காவிலும் பாம்புகளை பிடித்து அசத்தியவர்கள்
    X

    செங்கல்பட்டை சேர்ந்த இருளர்களுக்கு பத்மஸ்ரீ விருது- அமெரிக்காவிலும் பாம்புகளை பிடித்து அசத்தியவர்கள்

    • பாம்புகளை பிடிப்பதற்கு சர்வதேச அளவில் பயிற்சி அளித்து வருகின்றனர்.
    • பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் இருவரும் விஷ மருந்துகள் கண்டறிவதிலும் பங்காற்றி வருகிறார்கள்.

    மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளை சேர்ந்த 26 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இதில் செங்கல்பட்டு மாவட்டம் செந்நேரி கிராமத்தை சேர்ந்த பாம்புபிடி வீரர்களான இருளர் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

    இவர்கள் இருவரும் மிகவும் அபாயகரமான விஷப்பாம்புகளை பிடிப்பதில் வல்லவர்கள் ஆவர். மேலும், பாம்புகளை பிடிப்பதற்கு சர்வதேச அளவில் பயிற்சி அளித்து வருகின்றனர்.

    மேலும், அமெரிக்காவின் புளோரிடாவில் மலைப்பாம்புகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த பிரபல வன உயிரின நிபுணர் ரோமுலஸ் விட்டேர்கர் தலைமையிலான குழுவில் மாசி சடையன், வடிவேல் கோபால் ஆகியோரும் இடம் பெற்று இருந்தனர்.

    இந்த குழு ஏராளமான மலைப் பாம்புகளை பிடித்தனர். இதில் வடிவேல் கோபாலும், மாசி சடையனும் பாம்புகளை லாவகமாக பிடித்து அசத்தினர். இதேபோல் அவர்கள் இருவரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி நாடுகளில் சென்று பாம்பு பிடித்து உள்ளனர். பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு இருப்பது குறித்து வடிவேல் கோபால் கூறும்போது, "இந்த விருது பெறுவதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

    அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட ஏராளமான நாடுகளுக்கு சென்று பாம்பு பிடித்து இருக்கிறோம். அதிக விஷத்தன்மை உள்ள பாம்புகளையும் பிடித்து உள்ளோம். ராஜநாகம் அதிகம் விஷத்தன்மை கொண்டது. எங்கள் தந்தை காலத்தில் இருந்து பாம்பு பிடித்து வருகிறோம். இதுவரை கண்ணாடி விரியன், நல்லபாம்பு உள்ளிட்ட ஏராளமான பாம்புகள் கடித்து இருக்கின்றன. ஆனால் இதற்கான முன் ஏற்பாடுகளுடன் இருப்போம்" என்றார்.

    மாசி சடையன் கூறும்போது, "இதுவரை பல பாம்புகளை பிடித்து இருக்கிறோம். இதனை கணக்கில் வைத்துகொள்ள மாட்டோம். பத்மஸ்ரீ விருது பெருவது மகிழ்ச்சி ஆகும்" என்றார்.

    மேலும் பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் இருவரும் விஷ மருந்துகள் கண்டறிவதிலும் பங்காற்றி வருகிறார்கள். பாம்புகளிடம் இருந்து விஷ எதிர்ப்பு மருந்துகளை சேகரிப்பதன் மூலம் இந்திய மருத்துவத் துறைக்கும் முக்கிய பங்காற்றி வருகிறார்கள்.

    இதேபோல் பிரபல பரதநாட்டிய கலைஞர் கல்யாண சுந்தரம் பிள்ளை, நூலகரும் சமூக சேவகருமான பாலம் கல்யாண சுந்தரம், பாளையங்கோட்டையை சேர்ந்த கோபால் சாமி, வேலுச்சாமி ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.

    பாடகி வாணி ஜெயராமுக்கு பத்மபூஷண் விருது அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×