search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு இன்று தண்ணீர் திறக்கவில்லை
    X

    கோப்புப்படம்

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு இன்று தண்ணீர் திறக்கவில்லை

    • கடந்த திங்கட்கிழமை காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் அதன் தலைவர் வினித்குப்தா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது.
    • மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 52.43 அடியாக இருந்தது.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை பொய்த்ததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறக்கப்படாததாலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது.

    இதையடுத்து குடிநீர் மற்றும் மீன்வளத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந்தேதி காலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டது. குடிநீருக்காக மட்டும் தொடர்ந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கிடையே கடந்த அக்டோபர் மாதம் 15-ந் தேதியில் இருந்து 31-ந் தேதி வரை தமிழகத்துக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடக்கோரி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. ஆனாலும் கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் மட்டுமே சொற்ப அளவில் வெளியேற்றப்பட்டு வந்தது. கர்நாடக அணைகளில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள விவசாயிகள், அரசியல்வாதிகளும் போராட்டம் நடத்தினர்.

    இதற்கிடையே கடந்த திங்கட்கிழமை காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் அதன் தலைவர் வினித்குப்தா தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் அடுத்து வரும் நாட்களுக்கான தண்ணீர் பங்கீடு தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.

    இதில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு வழங்கவேண்டிய 13 டி.எம்.சி. தண்ணீர் மற்றும் ஏற்கனவே நிலுவையில் உள்ள 3 டி.எம்.சி. தண்ணீர் என மொத்தமாக 16 டி.எம்.சி. தண்ணீரை திறக்க பரிந்துரை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஆனால் கர்நாடகா தரப்பில் தங்கள் மாநிலத்தில் மழை பற்றாக்குறை நிலவுவதாகவும், இதனால் குடிநீர் பற்றாக்குறை உள்ளதாகவும் எனவே தண்ணீர் திறந்து விட இயலாது என்று கூறினர்.

    2 தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட காவிரி ஒழுங்காற்றுக் குழு தமிழகத்திற்கு நவம்பர் 1-ந்தேதியான இன்று முதல் வருகிற 15 நாட்களுக்கு வினாடிக்கு 2ஆயிரத்து 600 கனஅடி தண்ணீர் திறக்க வேண்டும் என பரிந்துரை செய்தது. ஆனால் வழக்கம்போல் கர்நாடக அணைகளில் இருந்து இன்றும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. கர்நாடகாவில் உள்ள கபினி அணைக்கு இன்று காலை நீர்வரத்து வினாடிக்கு 196 ஆக இருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் வெறும் 300 கனஅடியே திறக்கப்பட்டு வருகிறது.

    இதே போல் கிருஷ்ண ராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 99.44 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 531 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. குடிநீருக்காக மட்டும் வாய்க்காலில் வினாடிக்கு 567 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 52.43 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2ஆயிரத்து 968 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீருக்காக 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    Next Story
    ×