search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மேல்மருவத்தூருக்கு லட்சக்கணக்கானோர் வருகை: பங்காரு அடிகளார் உடலுக்கு செவ்வாடை பக்தர்கள் அஞ்சலி

    • பங்காரு அடிகளார் மறைவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சியினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
    • வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    மதுராந்தகம்:

    பக்தர்களால் 'அம்மா' என்று அழைக்கப்பட்டவர் பங்காரு அடிகளார் (வயது 82). இவர் மேல்மருவத்தூரில் ஆதிபராசக்தி சித்தர் பீடம் நிறுவி பக்தர்களுக்கு அருள்வாக்கு அளித்து வந்தார்.

    இந்த கோவிலுக்கு வருபவர்கள் சிவப்பு நிற ஆடைகள் அணிந்து வருவதால் செவ்வாடை பக்தர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

    பங்காரு அடிகளார் கடந்த ஒரு ஆண்டாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் அவர் கோவில் வளாகத்தில் உள்ள வீட்டில் இருந்தபடியே மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் பங்காரு அடிகளார் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது இறப்பு செய்தி கேட்டதும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று மாலை முதலே பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்த மேல்மருவத்தூர் நோக்கி ஏராளமான பக்தர்கள் வரத் தொடங்கினர். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டது. விடிய விடிய பக்தர்கள் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.

    பங்காரு அடிகளார் மறைவையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) மதுராந்தகம் கோட்டத்துக்குட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம் பகுதியில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

    மேலும் பங்காரு அடிகளார் மறைவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து கட்சியினர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    இதற்கிடையே இன்று அதிகாலை முதல் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்த குவிந்தனர். கார் மற்றும் வாகனங்களில் பக்தர்கள் வந்து கொண்டு இருந்ததால் கூட்டம் தொடர்ந்து அதிகரித்தது.பெண் பக்தர்கள் கண்ணீர் சிந்தியபடி அஞ்சலி செலுத்தினர்.

    வாகன நெரிசலை தடுப்பதற்காக சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேல்மருவத்தூர் நோக்கி வந்த வாகனங்களை ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தி செல்ல அறிவுறுத்தினர். இதனால் சுமார் 5 கி.மீ. தூரத்துக்கு பக்தர்கள் காத்திருந்து பங்காரு அடிகளாருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்பிரனீத் மேற்பார்வையில் சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.


    இன்று காலை 9.30 மணியளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    இதேபோல் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனும் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

    இதைத் தொடர்ந்து பங்காரு அடிகளாரின் உடல் வீட்டில் இருந்து தியான மண்டபத்திற்கு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது. பின்னர் அங்கு பொதுமக்கள், பக்தர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.

    வெளியூர்களில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

    பங்காரு அடிகளாரின் உடல் அடக்கம் அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    அதன்படி இன்று மாலை 5 மணிக்கு மேல் பங்காரு அடிகளாரின் உடல் அடக்கம் நடைபெறுகிறது. முதலில் அவர் ஏற்கனவே 2 ஆண்டுக்கு முன்பு தியான மண்டபம் அருகே கட்டி வைத்திருந்த சமாதியில் உடல் அடக்கம் நடைபெறும் என்று கூறப்பட்டது.

    தற்போது கோவில் அருகே உள்ள புற்று மண்டபத்தில் உடல் அடக்கம் சித்தர் முறைப்படி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

    தற்போது அதிக அளவில் பக்தர்கள் குவிந்து வருவதால் பஸ் நிலையம், ரெயில் நிலைய பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். பங்காரு அடிகளாரின் மறைவால் மேல்மருவத்தூர் பகுதியே சோகமாக காட்சி அளிக்கிறது.

    Next Story
    ×