search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடந்த 15 மாதங்களில் ரூ.3,566 கோடி கோவில் நிலங்கள் மீட்பு- அமைச்சர் சேகர்பாபு தகவல்
    X

    கடந்த 15 மாதங்களில் ரூ.3,566 கோடி கோவில் நிலங்கள் மீட்பு- அமைச்சர் சேகர்பாபு தகவல்

    • 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் முடிவுரை எந்த இயக்கத்திற்கு எழுதப்பட போகிறது என்பது நாடாளுமன்றத் தேர்தலினுடைய முடிவுகளில் காண்பிக்கப்படும்.
    • திராவிட முன்னேற்ற கழகம் எப்போதெல்லாம் அதிகாரத்திற்கு வருகின்றதோ அப்போதெல்லாம் தமிழ் தலைநிமிர்ந்து நிற்கும்.

    சென்னை:

    2021- 2022 மற்றும் 2022- 2023 -ம் ஆண்டுகளுக்கான மானியக்கோரிக்கையின் போது சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு சட்டமன்ற மானியக் கோரிக்கைகளில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளில், நிறைவு பெற்ற பணிகளின் செயல்பாடுகள் குறித்தும், நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டங்களின், பணிகளின் முன்னேற்றம் குறித்தும் மண்டலங்கள் வாரியாக இணை ஆணையர்கள் மற்றும் பொறியாளர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்கு நடத்த வேண்டிய கோவில்கள், பல ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகளை மேற்கொள்ளப்பட்டு இதுவரையிலும் குடமுழுக்கு நடைபெறாத கோவில்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள், நகரங்களில் இருக்கின்ற சிறிய சிறிய கோவில்கள் என்று அனைத்து கோவில்களும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மேற்கொண்டு வருகிறோம்.

    கடந்த 15 மாதங்களில் 310 கோவில்களில் குடமுழுக்கு நடந்திருக்கின்றது. அதேபோல் ஆக்கிரமிப்பு செய்திருந்த சுமார் 3,118 ஆக்கிரமிப்பாளர்களை அகற்றி 2,710 ஏக்கர் நிலத்தை மீட்டெடுத்து சுமார் 3566 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் மீட்கப்பட்டிருக்கின்றது. அதோடு மட்டுமல்லாமல் மீட்கப்பட்ட சொத்துக்களை வாடகைக்கு விடவும், அதேபோல் ஏற்கனவே கோவிலுக்கு சொந்தமான எந்தவித பயன்பாட்டிலும் இல்லாத இடங்கள், காலி மனைகள், கட்டிடங்களை வருவாய் ஈட்டுகின்ற அளவிற்கு அதை வாடகைக்கு விடுவதற்கு உண்டான முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

    கே: சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பற்றி?

    பதில்: இந்த ஆட்சியைப் பொறுத்தளவில் இன்னார், இனியவர் என்ற பாகுபாடே கிடையாது. தவறு யார் செய்திருந்தாலும் அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குழந்தை திருமணம் என்பது சட்டத்திற்கு புறம்பானது. அதை செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத்தான் வேண்டும். ஆகையால் சட்டம் தன் கடமையை செய்கிறது.

    கே: தி.மு.க. அரசு தமிழுக்கு முடிவுரை எழுதிக் கொண்டிருக்கிறது என்று பா.ஜ.க.வினர் விமர்சித்து போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது குறித்து?

    பதில்: 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் முடிவுரை எந்த இயக்கத்திற்கு எழுதப்பட போகிறது என்பது நாடாளுமன்றத் தேர்தலினுடைய முடிவுகளில் காண்பிக்கப்படும். திராவிட முன்னேற்ற கழகம் எப்போதெல்லாம் அதிகாரத்திற்கு வருகின்றதோ அப்போதெல்லாம் தமிழ் தலைநிமிர்ந்து நிற்கும். அதற்கு உதாரணம் என்று எடுத்துக் கொண்டால் அருகில் இருக்கின்ற ரிப்பன் மாளிகையில் தமிழ் வாழ்க என்று இருக்கும். கடந்த பத்தாண்டு காலமாக அந்த ஒளி பொருந்தி அந்த பலகை செயல்பாட்டிலேயே இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகுதான் அது செயல்பாட்டிற்கு வந்தது.

    அதேபோல அன்னைத் தமிழில் வழிபாடு கூட எந்த கோவிலிலும் நடைபெறாத சூழல் இருந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகுதான் 48 முதுநிலை கோவில்களில் தமிழில் அர்ச்சனை ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றது. 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவில் பார்ப்போம் என தெரிவித்தார்.

    Next Story
    ×