என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5,132 கனஅடியாக குறைந்தது
- கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் இன்று நீர்வரத்து குறைந்தது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது.
மேலும் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததாலும் அங்குள்ள அணைகளில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீர் திறக்காததாலும் அணையின் நீர்மட்டம் கடந்த 10-ந்தேதி 30 அடியாக குறைந்தது. இதனால் பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைத்தும் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வந்த நிலையில் இன்று நீர்வரத்து குறைந்தது. நேற்று அணைக்கு வினாடிக்கு 7 ஆயிரத்து 714 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று வினாடிக்கு 5 ஆயிரத்து 132 கனஅடியாக குறைந்தது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 47.33 அடியாக இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது.






