என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 36.31 அடியாக குறைந்தது
- அணைக்கு வினாடிக்கு 3122 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
- அணையில் இருந்து வினாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 10.2 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி முதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட போது 103 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்தது. மேலும் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்தும் குறைந்தது.
இதற்கிடையே கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்ததாலும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனால் அணையின் நீர்மட்டம் குறையாமல் இருந்தது.
தற்போது கர்நாடகாவில் தண்ணீர் குறைத்து விட்டதாலும், தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதாலும் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து விட்டது. அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட அதிகளவில் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 36.31 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3122 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 10.2 டி.எம்.சி. தண்ணீரே இருப்பு உள்ளது.






