என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 446 கனஅடியாக குறைந்தது
- இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும்.
- தற்போது அணையில் குறைந்த அளவிலேயே தண்ணீர் இருப்பதால் நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு விட்டது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாகவும், கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதற்கிடையே தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நின்றதாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
நேற்று காலை அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 524 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று நீர்வரத்து வினாடிக்கு 3 ஆயிரத்து 446 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 36.94 அடியானது. மேலும் அணையில் இருந்து பாசனத்துக்கு தொடர்ந்து வினாடிக்கு 6500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 10.5 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.
எனவே இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும். தற்போது அணையில் குறைந்த அளவிலேயே தண்ணீர் இருப்பதால் நீர்த்தேக்க பகுதிகள் வறண்டு விட்டது. தற்போது அணையில் தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது.






