என் மலர்
தமிழ்நாடு

மதுரையில் ரவுடியை வெட்டி கொலை செய்த கும்பல் யார்?- போலீசார் தீவிர விசாரணை
- கொலை செய்யப்பட்ட ஜெபமணி மீது 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- வீட்டின் வாசலின் அருகே ஒரு பெட்டி கடையில் நண்பர்களுடன் ஜெபமணி பேசிக் கொண்டிருந்தார்.
மதுரை:
மதுரை மேலவாசல் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு காலனியைச் சேர்ந்தவர் ஜெபமணி (வயது 32). இவரது மனைவி ஜோதி மீனா. இவர்களுக்கு ஒரு வயதில் மகள் உள்ளார்.
ஜெபமணி மீது 2 கொலை, கொள்ளை உள்ளிட்ட 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால் ஜெபமணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசார் அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதை எதிர்த்து ஜெபமணி வழக்கு தொடர்ந்தார் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்தது. இதையடுத்து ஜெபமணி விடுதலை செய்யப்பட்டு கடந்த 5 நாட்களுக்கு முன்பு மதுரைக்கு வந்தார். நேற்று இரவு மதுரை மேலவாசலில் உள்ள அவரது வீட்டில் தனது மகளின் முதல் பிறந்த நாளை குடும்பத்தினருடன் ஜெபமணி கொண்டாடினார்.
பின்னர் கணவன், மனைவி குழந்தையுடன் வெளியே புறப்பட தயாராகினர். அப்போது வீட்டின் வாசலின் அருகே ஒரு பெட்டி கடையில் நண்பர்களுடன் ஜெபமணி பேசிக் கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் அங்கு மோட்டர் சைக்கிளில் வந்த 3 பேர் பயங்கர ஆயுதங்களுடன் ஜெபமணியை சரமாரியாக தாக்கினர். தொடர்ந்து மயங்கி விழுந்தவரை அந்த கும்பல் அரிவாளால் வெட்டியது இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த ஜெபமணி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
மகளின் பிறந்தநாள் கொண்டாடிய சந்தோசம் சிறிது நேரம் கூட நிலைக்கவில்லை ஜெபமணி பிணமாக கிடந்ததை பார்த்து அவரது மனைவி ஜோதி மீனா மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்த திடீர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலை செய்யப்பட்ட ஜெபமணி மீது 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே அவர் பழிக்கு பழியாக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ஆனால் எந்த வழக்கில் பழி வாங்க யார் கொலை செய்தது என்று தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து ஜெபமணியை கொன்ற 3 பேரை வலை வீசி தேடி வருகின்றனர்.