search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புத்தாண்டு கொண்டாட்டம்- கண்ணுக்கு விருந்தளித்த லேசர்-டிரோன் ஷோ
    X

    புத்தாண்டு கொண்டாட்டம்- கண்ணுக்கு விருந்தளித்த லேசர்-டிரோன் ஷோ

    • வண்ண, வண்ணமயமாக ஜொலித்த லேசர் காட்சிகளை மக்கள் கண்டு ரசித்தனர்.
    • மக்கள் கூட்டம் திரண்டதால் கோவை வாலாங்குளம் சென்னை மெரினா கடற்கரை போல காட்சியளித்தது.

    கோவை:

    2023-ம் ஆண்டு நிறைவு பெற்று நேற்று நள்ளிரவு 2024-ம் ஆண்டு பிறந்தது. இதையொட்டி உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

    2024-ம் ஆண்டு பிறந்ததையொட்டி கோவையில் மக்கள் முக்கிய பகுதிகளில் திரண்டு புதிய ஆண்டை ஆடல், பாடல்களை இசைக்க விட்டு உற்சாகத்துடன் வரவேற்றனர்.

    கோவை வாலாங்குளத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதையடுத்து நேற்று மாலை 6 மணி முதலே கோவை வாலாங்குளத்தில் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக குவிய தொடங்கினர்.

    அங்கு பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில், இன்னிசை கச்சேரிகள், ஆடல், பாடல் நிகழ்ச்சிகள், லேசர்ஷோவும் நடத்தப்பட்டது. வண்ண, வண்ணமயமாக ஜொலித்த லேசர் காட்சிகளை மக்கள் கண்டு ரசித்தனர்.

    மேலும் சின்னத்திரை நடிகர்களின் நகைச்சுவை நிகழ்ச்சி, மிமிக்கிரி மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடந்தன. அத்துடன் செண்டை மேளம், ஆங்காங்கே செல்பி ஸ்பாட், பூ போன்ற அலங்கார உடை, பிரமாண்ட பாண்டா கரடி உள்ளிட்ட வேடங்களில் பொதுமக்களை குஷிபடுத்தினர்.

    குழந்தைகளை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது. பல்வேறு நடன கலைஞர்கள் பங்கேற்று நடனம் ஆடி மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர்.

    இரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறந்ததும் கோவை வாலாங்குளக்கரையில், கண்ணை கவரக்கூடிய லேசர் ஷோ மற்றும் டிரோன் ஷோ நடத்தப்பட்டது. பல்வேறு வண்ண, வண்ண வடிவத்தில் ஜொலித்த இந்த நிகழ்ச்சி அங்கு திரண்டு இருந்த மக்களின் கண்களுக்கு விருந்தளிப்பதாக இருந்தது. குறிப்பாக புத்தாண்டு பிறந்ததும் 15 நிமிடங்களுக்கு 250 டிரோன் கேமராக்கள் பறக்க விடப்பட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது அங்கு குழுமியிருந்த மக்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

    மக்கள் அதனை பார்த்து ரசித்து, தங்கள் செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்தனர். அத்துடன் 300 வகையான வண்ண வண்ண விளக்குகளும் பொருத்தப்பட்டு, வாலாங்குளம் குளக்கரையே மின்னொளியிலும், லேசர் ஷோவிலும், வண்ண பட்டாசுகள் வெடித்தும் அந்த பகுதியே வண்ணமயமாக ஜொலித்து கொண்டிருந்தது.

    புத்தாண்டு பிறந்ததும், அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். அதிகளவில் மக்கள் கூட்டம் திரண்டதால் கோவை வாலாங்குளம் சென்னை மெரினா கடற்கரை போல காட்சியளித்தது.

    கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகளவிலான மக்கள் வாலாங்குளத்தில் குவிந்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்து கொண்டு அனைவரும் ஒரே நேரத்தில் வெளியேறியதால், வாலாங்குளத்தில் இருந்து அரசு மருத்துவமனை செல்லும் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    Next Story
    ×