search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னிமலை அருகே இன்று வாய்க்காலில் இறங்கி கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    சென்னிமலை அருகே இன்று வாய்க்காலில் இறங்கி கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • ஆகஸ்ட் 15 -ந் தேதி அன்று கீழ்பவானி கால்வாயில் பாசன நீர் திறந்து விட வேண்டும்.
    • முடிக்கப்படாத கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    சென்னிமலை:

    கீழ்பவானி வாய்க்காலில் காங்கிரீட் அமைக்க பாசனதாரர்கள், குடிநீர் ஆதாரம் பெறும் கிராம மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நீர்வளத் துறை சார்பில் வாய்க்காலில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.

    அதில் அரசு அறிவிப்புக்கு மாறாக மண்கரைகளை சேதப்படுத்தி வருவதை கண்டித்து ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களை சேர்ந்த கீழ்பவானி பாசன பாதுக்காப்பு இயக்கத்தினர் இன்று முதல் தினம் ஒரு பகுதியில் வாய்க்காலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

    அதன்படி முதல் நாளான இன்று காலை ஈரோடு மாவட்டம் சென்னிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழ்பவானி வாய்க்காலின் 83-வது மைலில் உள்ள ஓட்டக்குளம் பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆகஸ்ட் 15 -ந் தேதி அன்று கீழ்பவானி கால்வாயில் பாசன நீர் திறந்து விட வேண்டும். நல்ல நிலையில் இருந்த மண் கரைகளை சேதப் படுத்தி அந்த இடங்களில் கட்டுமானங்களை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் நீர்வளத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    முடிக்கப்படாத கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். உண்மையான பாசன விவசாயிகளின் கருத்துக்களை கேட்காமல் தயாரித்த மோகன கிருஷ்ணன் அறிக்கையை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். கான்கிரீட் திட்டம் கோரும் அரசாணை எண். 276-ஐ அரசு ரத்து செய்ய வேண்டும்.

    68 ஆண்டுகளாக உள்ள மக்களுக்கான மண் கரை மற்றும் மண் அணையை பாதுகாக்க வேண்டும். கரைகளில் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை பாதுகாக்க வேண்டும்.

    வாய்க்கால் கரையில் மண் திருட்டு, மர திருட்டு, நீர் திருட்டு, பவானி ஆறு மாசுபடுதல் உள்ளிட்ட செயல்களுக்கு காரணமானவர்கள் மற்றும் துறை அதிகாரிகள் மீது உறுதியான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    இதில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமையில் ஓட்டக்குளம் பகுதி கீழ்பவானி பாசன தாரர்கள், குடிநீர் ஆதாரம் பெறும் கிராம மக்கள் என 150-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×