search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொடைக்கானலில் காஷ்மீர் வியாபாரி தீக்குளித்து தற்கொலை
    X

    கொடைக்கானலில் காஷ்மீர் வியாபாரி தீக்குளித்து தற்கொலை

    • சிகிச்சை பலனின்றி சபீர் ராஜா உயிரிழந்தார்.
    • கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர் பயாஸ் ராஜா (வயது 60). இவரது தம்பி சபீர்ராஜா (58). இவர்கள் 2 பேரும் கடந்த பல ஆண்டுகளாக கொடைக்கானல் கவி தியாகராஜர் சாலையில் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர்.

    கட்டிடத்தின் மேல் தளத்தில் பயாஸ் ராஜாவும், கீழ் தளத்தில் சபீர் ராஜாவும் வியாபாரம் செய்து வந்தனர். இருவருக்கும் இடையே கடைக்கு செல்லும் பொது நடைபாதை யாருக்கு சொந்தம் என்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

    இதனால் பயாஸ் ராஜா தனக்கு சொந்தமான ஒரு பகுதியை இரும்பு வேலியால் அடைத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது தம்பி சபீர் ராஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தனது கடை முன்பு நின்று உடல் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

    இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை சபீர் ராஜா உயிரிழந்தார். இது குறித்து கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×