search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவானது: வட மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை
    X

    வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம் உருவானது: வட மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

    • பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
    • பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மீனவர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்யும். இந்த பருவமழைதான் தமிழகத்துக்கு அதிக மழை தரும் பருவமழையாகும்.

    தமிழகம் ஒரு ஆண்டில் பெறும் மொத்த மழை அளவில் சுமார் 50 சதவீதம் மழையை இந்த மூன்று மாத வடகிழக்கு பருவமழை தரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 21-ந்தேதி தொடங்கியது.

    முதல் 2 வாரங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. முதல் வாரத்தில் 196 மில்லி மீட்டர் மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால் அந்த இயல்பை விட மிக குறைவாக 49 மில்லி மீட்டர் மழையே பெய்துள்ளது.

    தென் மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் மட்டும் கனமழை பெய்தது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்பை விட 144 சதவீதம் மழை அதிகம் பெய்தது. மற்ற மாவட்டங்களில் மழை குறைவாக இருந்ததால் பருவமழை தொடங்கி முதல் 3 வாரங்களில் 41 சதவீதம் அளவுக்கு மழை பற்றாக்குறை நிலை காணப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த வாரம் அரபிக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது வலுப்பெற்று தமிழகத்தில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்மாறாக மழை பொழிவு இல்லாமல் போனது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்ததால் பருவமழை ஏமாற்றத்தை தந்தது.

    இதற்கிடையே அடுத்தடுத்து உருவான மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை பரவலாக பெய்தது. என்றாலும் இந்த மாத தொடக்கத்திலும் இயல்பை விட பருவமழை குறைவாக பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உருவானது. தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வங்க கடலில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்தம் நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்று வானிலை இலாகா தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்தம் ஒடிசா கடலோரம் நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்கள் உள்பட கடலோர பகுதிகளில் இன்றும், நாளையும் பலத்த, மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

    பெரும்பாலான இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்று எச்சரித்து உள்ளனர்.

    சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாளை (புதன்கிழமை) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் விட்டு விட்டு மிதமான மழை பெய்யும்.

    சென்னை, செங்கல்பட்டு உள்பட கடலோர பகுதி மாவட்ட மக்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப் பட்டு இருப்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பழவேற்காடு மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று மீனவர் நலத்துறை அறிவுறுத்தி உள்ளது.

    இன்று 19 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு இருக்கும் நிலையில் நாளை 21 மாவட்டங்களில் பலத்த மழை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 27 மாவட்டங்களை வருவாய்த்துறை உஷார் படுத்தி உள்ளனர். இதையடுத்து மழை பாதிப்பு பகுதிகளில் உதவி செய்வதற்காக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் வங்க கடலில் மேலும் ஒரு காற்றழுத்தம் உருவாக வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் தற்போது மேலடுக்கு சுழற்சி ஒன்றும் நிலவி வருகிறது.

    கடல் மட்டத்தில் இருந்து 1.5 கிலோ மீட்டர் உயரத்தில் அந்த மேலடுக்கு சுழற்சி இருப்பதால் அது மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது காற்றழுத்தமாக மாறக்கூடும் என்று தெரிகிறது.

    அந்த குறைந்த காற்றழுத்தம் வலுவாகி கிழக்கு கடலோர பகுதியை நோக்கி நகர்ந்து வரும். இதன் காரணமாகவும் தென் மாநிலங்களில் கடலோர பகுதிகளில் மழை பொழிவுக்கு வாய்ப்பு அதிகரிக்கும்.

    நாளை (15-ந்தேதி) முதல் 18-ந்தேதி வரை 4 நாட்கள் தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். கடல் பகுதியில் காற்று 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறுமா? புயலாக மாறுமா? தமிழகத்தை நோக்கி வருமா? என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் இது இரண்டாவது சுற்று மழைப் பொழிவை தரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×