என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சேலம் மாவட்டம் முழுவதும் விடிய, விடிய பலத்த மழை
    X

    கோப்பு படம்

    சேலம் மாவட்டம் முழுவதும் விடிய, விடிய பலத்த மழை

    • மாநகரின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி பணிகளுக்காக தோண்டப்பட்டு இருந்த குழிகளில் மழை நீர் தேங்கி நின்றது.
    • புறநகர் பகுதிகளான தம்மம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதே போல் நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டியது.

    சேலம் மாநகர் பகுதியில் நேற்று காலை முதலே மேகமூட்டம் நிலவியது. பின்னர் திடீரென சாரல் மழை பெய்தது. பின்னர் மதியம் 2 மணியளவில் பலத்த மழையாக கொட்டியது. இதன் காரணமாக மாநகரின் பல்வேறு பகுதிகளில் வளர்ச்சி பணிகளுக்காக தோண்டப்பட்டு இருந்த குழிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

    மேலும் பல்வேறு இடங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. அதோடு காய்கறி மார்க்கெட் மற்றும் பல இடங்களில் சேறும், சகதியுமாக மாறியது. இதனால் மாலையில் பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் மற்றும் வேலை முடிந்து வீடு திரும்பிய பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    இதே போல் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளான தம்மம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் எடப்பாடி, சங்ககிரி, கெங்கவல்லி, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர், காடையாம்பட்டி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது.

    இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. பலத்த மழை காரணமாக கிராம புறங்களில் உள்ள விவசாய தோட்டங்களை மழை வெள்ளம் சூழ்ந்து நின்றது. மேலும் இரவில் கடுங்குளிரும் நிலவியது.

    சேலம் மாவட்டத்தில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் தம்மம்பட்டியில் 92மி.மீ. மழை கொட்டியது. மற்ற இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    எடப்பாடி-86, சங்ககிரி-67.4, கெங்கவல்லி-50, ஆத்தூர்-45.2, ஏற்காடு-41, சேலம்-40.3, ஆணைமடுவு-36, தலைவாசல்-27, வீரகனூர்-25, கரியகோவில்-22, ஓமலூர்-18.2, காடையாம்பட்டி-15.6, மேட்டூர்-8.2, பெத்த நாயக்கன் பாளையம்-6, என மொத்தம் மாவட்டம் முழுவதும் 579.90 மி.மீ. மழை பெய்தது.

    தொடர்ந்து இன்று காலையும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மேகமூட்டம் நிலவி வருகிறது. கடுங்குளிரும் நிலவி வருகிறது.

    Next Story
    ×