search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை: ஈரோட்டில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது
    X

    நள்ளிரவில் கொட்டி தீர்த்த கனமழை: ஈரோட்டில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது

    • பெருந்துறை, சத்தியமங்கலம் பகுதியில் நள்ளிரவில் 3 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.
    • பவானிசாகர், கொடிவேரி, வரட்டுபள்ளம் அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    ஈரோடு:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. ஈரோடு மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்தது. கடந்த ஒரு வாரமாக மழை பொழிவு இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.

    இந்நிலையில் நேற்று காலையும் வழக்கம் போல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இரவு 10 மணிக்கு பிறகு லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. நள்ளிரவு 12 மணி முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது. கிட்டத்தட்ட 3 மணி நேரம் இந்த கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    ஈரோடு மாநகர் பகுதியில் அன்னை சத்யா நகர், மல்லி நகரின் மையப்பகுதியில் பிச்சைக்கார பள்ளம் ஓடை செல்கிறது. இந்த பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மழை பெய்யும் போதெல்லாம் ஓடைகளில் அடைப்பு ஏற்பட்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த மழை நீர் வீடுகளுக்குள் புகுவது தொடக்கதையாகி வருகிறது.

    கடந்த 20 நாட்களுக்கு முன்பு தான் இந்த பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. இதனால் மக்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். ஓடைகளில் ஏற்படும் அடைப்பை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால் மீண்டும் பிச்சைக்காரன் பள்ளம் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த மழை நீர் அருகே இருந்த அன்னை சத்யா நகர் மற்றும் மல்லி நகரில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் தரைத்தளத்தில் உள்ள மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    வீடுகளில் இருந்த பிரிட்ஜ், வாஷிங் மெஷின், டி.வி. போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை மேல் தளத்திற்கு எடுத்து சென்றனர். மாணவ-மாணவிகளில் பாடப் புத்தகங்கள் மழை நீரில் நனைந்தது. மேலும் வீடுகளை சுற்றியும் மழைநீர் தேங்கி நின்றதால் அவர்களது இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது. ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது அன்னை சத்யா நகர், மல்லி நகர் பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். வீடுகளுக்குள் புகுந்த மழை நீரை மக்கள் வாலியால் இறைத்து வெளியே ஊற்றினர்.

    தகவல் அறிந்ததும் மாநகராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஓடைகளில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை சரி செய்து வருகின்றனர். மழைநீர் சூழ்ந்து இருப்பதால் குழந்தைகள், முதியவர்கள் கடும் அவதி அடைந்தனர்.


    இதேபோல் ஈரோடு மாவட்டத்தின் புறநகர் பகுதியில் இரவு நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்ததால் பல்வேறு பகுதிகளில் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நசியனூர் அடுத்த சாமிகவுண்டன் பாளையம் பகுதிகளில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த நீர் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சூழ்ந்துள்ளது. இதன் காரணமாக நள்ளிரவு 2 மணி முதல் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு சாலையின் இரு புறங்களிலும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு கனரக வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

    கார், மோட்டார்சைக்கிள் போன்ற சிறியரக வாகனங்கள் மாற்று வழியில் சென்று வருகின்றன. சாமிகவுண்டன்பாளையம், பள்ளத்தூர், மலையம்பாளையம் போன்ற பகுதிகளில் உடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பள்ளத்தூர் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது. அந்த பகுதியை சேர்ந்த ராணி என்பவர் வீடு மழையால் இடிந்து விழுந்தது. நல்ல வாய்ப்பாக அங்கு யாரும் இல்லாததால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது.

    இதேபோல் பெருந்துறை, சத்தியமங்கலம் பகுதியில் நள்ளிரவில் 3 மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதேபோல் பவானிசாகர், கொடிவேரி, வரட்டுபள்ளம் அணை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    Next Story
    ×