search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை- புறநகர் பகுதிகளில் விடிய விடிய பலத்த மழை: தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது
    X

    சென்னை- புறநகர் பகுதிகளில் விடிய விடிய பலத்த மழை: தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது

    • சென்னை மாநகர சாலைகள் ஏற்கனவே மழையால் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.
    • தற்போது பெய்த மழையால் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    சென்னை:

    தமிழகத்தை நோக்கி காற்றழுத்த தாழ்வு பகுதி நகர்ந்து வருவதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து நேற்று இந்த மாவட்டங்கள் அனைத்திலும் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    இதன் தொடர்ச்சியாக 12 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.

    திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்று ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருந்தது. சென்னையிலும் பலத்த மழை பெய்யும் என்று வானிலை மையம் கணித்திருக்கிறது. இதனால் நேற்று முதலே பலத்த மழை பெய்யும் என்று எதிர் பார்க்கப்பட்டது. இதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளிலும் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.

    இன்று காலையிலும் 5 மணியளவில் இருந்தே சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சில இடங்களில் இடைவிடாமல் பெய்து கொண்டே இருந்தது.

    செங்குன்றம், புழல், மாதவரம், மூலக்கடை, பெரம்பூர், புரசைவாக்கம், டாணா தெரு, ஓட்டேரி, வேப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் காலை 7 மணியளவில் பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

    பெரம்பூர் ஜமாலியா பகுதியில் எப்போதும் போல சாலையில் மழைநீர் தேங்கியது. பட்டாளம், வியாசர்பாடி, கன்னிகாபுரம், புளியந்தோப்பு, ஸ்பென்சர் சாலை, சூளை உள்பட வட சென்னையின் பல இடங்களில் வெள்ளம் போல் தண்ணீர் தேங்கியது.

    பெரம்பூர் பஸ் நிலையம் வெள்ளக்காடாக காட்சி அளித்தது. வியாசர்பாடி ஜீவா சுரங்கபாதை பகுதியிலும் தண்ணீர் சூழ்ந்து காணப்பட்டது.

    அயனாவரம் பச்சைக்கல் வீராசாமி நகர், திருவள்ளுவர் நகர், நம்மாழ்வார் பேட்டை மார்க்கெட், ஐ.சி.எப். ரெயில்வே குடியிருப்பு வடக்கு காலனி, வில்லிவாக்கம் அன்னை சத்யா நகர், சீனிவாசன் நகர் வடக்கு ஜெகநாதர் நகர், ரெட்டி தெரு, வில்லிவாக்கம் மார்க்கெட், கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி பட்டரவாக்கம் பால் பண்ணை சாலை, மேனாம்பேடு கருக்கு, டி.டி.பி.காலனி, கள்ளிக்குப்பம் காந்திநகர், அத்திப்பட்டு அயப்பாக்கம் சாலை, அம்பத்தூர் அன்னை சத்யா நகர் போன்ற பகுதிகளில் மழைநீர் சாலைகளில் தேங்கியுள்ளது. இதனை மோட்டார் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவொற்றியூர், மணலி, எண்ணூர் போன்ற பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. மழை நீரை மாநகராட்சி அதிகாரிகள் ராட்சத மின் மோட்டார் மூலம் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    மேலும் பலத்த காற்று வீசியதால் பல இடங்களில் வீடுகள் மற்றும் சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. நேற்று இரவு திருவொற்றியூர் அம்சா தோட்டம் பகுதியில் சாலை ஓரம் இருந்த மரம் முறிந்து கீழே விழுந்தது.

    இதனால் இன்று காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு அம்சா தோட்டம் பகுதிக்கு சென்று மாநகராட்சி ஊழியர்கள் மூலம் கீழே விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார். இதையடுத்து போக்குவரத்து சீரானது.

    மேலும் மாநகராட்சி சார்பில் 11 ஆயிரம் பேர்களுக்கு மதிய உணவு தயாரிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை மாநகர சாலைகள் ஏற்கனவே மழையால் குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதில் தற்போது பெய்த மழையால் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

    தேங்கிய மழைநீரில் சில இடங்களில் பெரிய பள்ளங்கள் இருந்தன. இதில் மோட்டார் சைக்கிகள் சிக்கிக்கொண்டன. இதனால் வாகனங்களில் சென்றவர்கள் தவறி விழுந்தும் பாதிப்பை சந்தித்தனர்.

    சென்னையில் உள்ள 16 சுரங்க பாதைகளிலும் மழைநீர் தேங்குவதை தடுக்க மாநகராட்சி சார்பில் முன் ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இதில் கத்திவாக்கம், கொங்குரெட்டி, துரைசாமி சுரங்க பாதைகளில் தேங்கிய மழை நீர் உடனடியாக வெளியேற்றப்பட்டது. இதனால் சுரங்க பாதைகளில் வாகன போக்குவரத்து தடை படவில்லை. எப்போதும் போல அனைத்து வானங்களும் சென்றன.

    கடந்த வாரம் பெய்த மழையால் தேங்கிய தண்ணீர் வடிந்திருந்த நிலையில் மீண்டும் பெய்த மழையால் மழைநீர் வடிந்த இடங்களில் மீண்டும் வெள்ளம் தேங்கியது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    பள்ளி, கல்லூரிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை விடப்பட்டிருந்ததால் மாணவ-மாணவிகள் மழை பாதிப்பில் இருந்து தப்பினர். அதே நேரத்தில் வேலைக்கு சென்ற பெண்கள் பலர் மழையால் பெரிதும் சிரமத்தை சந்தித்தனர்.

    Next Story
    ×