search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காஞ்சிபுரத்தில் பசுமை வாக்குச்சாவடி... வாக்களித்தவர்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது
    X

    காஞ்சிபுரத்தில் பசுமை வாக்குச்சாவடி... வாக்களித்தவர்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது

    • வாக்குச்சாவடியின் முன்பகுதியில் வாழை மர தோரணம், இளநீர் மற்றும் பழங்கள், காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு பசுமையாக காணப்பட்டது.
    • அதிகாலை முதலே ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து மரக்கன்றுகளை வாங்கிச்சென்றனர்.

    காஞ்சிபுரம்:

    பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

    காஞ்சிபுரம் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 1932 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 372 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அடையாளம் காணப்பட்டு கூடுதல் பாதுகாப்பு செய்யப்பட்டு உள்ளது.

    மாவட்டம் முழுவதும் 670 போலீசார் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் 350 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்டம் முழுவதும் தேர்தல் பணியில் 800 அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் அடுத்த சிறுகாவேரிபாக்கம் பகுதியில் பசுமை வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. வாக்குச்சாவடியின் முன்பகுதியில் வாழை மர தோரணம், இளநீர் மற்றும் பழங்கள், காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு பசுமையாக காணப்பட்டது.

    மேலும் இந்த வாக்குச்சாவடியில் ஓட்டுப்போட்ட அனைவருக்கும் மரக்கன்று இலவசமாக வழங்கப்பட்டது. இதனால் அதிகாலை முதலே ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து வாக்களித்து மரக்கன்றுகளை வாங்கிச்சென்றனர்.

    திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, ஆவடி, மாதவரம், பூந்தமல்லி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் தலைமையில் 35 பறக்கும் படைகள், 22 அதிவிரைவு படைகள் அமைக்கப்பட்டு 1065 போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மேலும், 268 மத்திய பாதுகாப்பு படையினர், 90 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், 462 முன்னாள் ராணுவத்தினர் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதே போல் பொன்னேரி, ஆவடி, மாதவரம், பூந்தமல்லி ஆகிய இடங்களில் ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் தலைமையில் 3,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இணையதளம் வழியாக கண்காணிக்கப்படுகிறது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 2825 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு காலை முதல் விறுவிறுப்பாக தொடங்கியது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர்.

    Next Story
    ×