search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டெல்டா மாவட்டங்களில் வரும் 11-ந்தேதி முழு அடைப்பு போராட்டம்
    X

    டெல்டா மாவட்டங்களில் வரும் 11-ந்தேதி முழு அடைப்பு போராட்டம்

    • டெல்டா மாவட்டங்களில் குறுவை நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர்கள் சுமார் 2 லட்சம் ஏக்கர் வரை காய்ந்து கருகிவிட்டன.
    • கர்நாடக அரசு கொடுக்க வேண்டிய காவிரி நீரை வழங்க வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் பலகட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூரில் இன்று காவிரிப் படுகை பாதுகாப்பு கூட்டியக்கம்ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கூட்டியக்கத்தைச் சார்ந்த தி.மு.க விவசாய அணி செயலர் ஏ.கே.எஸ். விஜயன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் சார்பில் குறுவை தொகுப்பு திட்டம் இந்த ஆண்டும் செயல்படுத்தப்பட்டதால் வழக்கத்தை விட கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றது. காவிரியில் கர்நாடக அரசு காவிரி நடுவர் மன்றம், சுப்ரீம் கோர்ட் இறுதி தீர்ப்பின்படி கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்காததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர்கள் சுமார் 2 லட்சம் ஏக்கர் வரை காய்ந்து கருகிவிட்டன.

    எனவே எஞ்சிய குறுவை பயிரை பாதுகாத்திடவும், சம்பா சாகுபடி பணிகளைத் தொடங்கிடவும் தமிழ்நாட்டுக்கு கர்நாடக அரசு கொடுக்க வேண்டிய காவிரி நீரை வழங்க வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களில் பலகட்ட போராட்டங்கள் நடைபெற்றது.

    தற்போது கர்நாடக அணைகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான தண்ணீர் உள்ள நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என கர்நாடகத்தில் இரண்டு முறை முழு அடைப்பு போராட்டத்தை பா.ஜ.க மற்றும் கன்னட அமைப்புகள் நடத்தின.

    காவிரி டெல்டா மாவட்டங்களில் எஞ்சியுள்ள குறுவைப் பயிரை பாதுகாக்கவும், சம்பா சாகுபடி தொடங்கவும் உடனடியாக காவிரியில் மாத வாரியாக கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தியும், கர்நாடகத்தில் போராட்டத்தைத் தூண்டிவிட்டு போராட்டம் நடத்தி வரும் பா.ஜ.க மற்றும் கன்னட அமைப்புகளைக் கண்டித்தும், தமிழக அரசு பல முறை மத்திய அரசிடம் வலியுறுத்திய பின்பும் பாராமுகமாக செயல்படும் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் வரும் 11 ஆம் தேதி (புதன்கிழமை) முழு அடைப்பு மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இப்போராட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சிகள், வணிகர் சங்கங்கள், அனைத்து விவசாய மற்றும் விவசாய தொழிலாளர் சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

    முழு அடைப்பு தொடர்பாக வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன், பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோரை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளோம். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளையும் சந்தித்து பேசி உள்ளோம்.

    டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கு சூழலுக்கு ஏற்ப இழப்பீட்டை முதலமைச்சர் அறிவித்துள்ளார். அவர் எப்போதுமே விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டே பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவர் சண்முகம், மாநில பொதுச்செயலர்கள் மாசிலாமணி, சாமி. நடராஜன், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் பெரியசாமி, விவசாய சங்கங்களின் கூட்டியக்கத் தலைவர் தெய்வசிகாமணி, திருவையாறு தொகுதி எம்.எல்.ஏ. துரை. சந்திரசேகரன், கூட்டியக்க நிர்வாகிகள் காளியப்பன், பழனிராஜன், என்.வி. கண்ணன், செந்தில் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×