என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

6 வழிச்சாலைக்கு எதிர்ப்பு: மாற்று இடம் வழங்கும் வரை போராட்டம் நீடிக்கும்- விவசாயிகள் அறிவிப்பு
- வடமதுரை பகுதியில் சாலை பணிக்காக பணியாளர் தங்குவதற்கு ஷெட் அமைக்கும் பணி நடைபெற்றது.
- விவசாய நிலங்கள் பாதிக்காத வண்ணம் மாற்றுப்பாதையில் சாலை அமைக்க வேண்டும்.
பெரியபாளையம்:
பொன்னேரி அருகே உள்ள தச்சூர் முதல் ஆந்திர மாநிலம் சித்தூர் வரை சுமார் 128 கி.மீட்டர் தூரத்துக்கு 6 வழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதற்காக மூன்று போகம் விளையக்கூடிய பல ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
6 வழிச்சாலையை மாற்று வழியில் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வடமதுரை பகுதியில் சாலை பணிக்காக பணியாளர் தங்குவதற்கு ஷெட் அமைக்கும் பணி நடைபெற்றது. இதனை விவசாயிகள் சங்கத்தினர் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதானம் பேச வைத்து போகச் செய்தனர்.
இது குறித்து விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது:-
தச்சூர்-சித்தூர் 6 வழிச்சாலைக்கு மூன்று போகம் விளையக்கூடிய பல ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உள்ளது. 2013-ம் ஆண்டின் நிலம் எடுப்பு சட்டத்தின் படி 3 போகம் விளையக்கூடிய விவசாய நிலத்தை கையகப்படுத்தக் கூடாது.
இல்லையெனில் அந்த இடத்துக்கு மாற்றாக வேறு இடம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
கையகப்படுத்தும் விவசாய நிலங்களுக்கு பதிலாக மாற்று இடம் வழங்கும் வரை எங்களது போராட்டம் தொடரும். வரும் நாட்களில் எங்களது போராட்டம் தீவிரம் அடையும்.
விவசாய நிலங்கள் பாதிக்காத வண்ணம் மாற்றுப்பாதையில் சாலை அமைக்க வேண்டும். பணி ஆணையில் உள்ள விவரங்கள் அடங்கிய பட்டியலை காண்பிக்க வேண்டும். நிலம் கையகப்படுத்த 80 சதவீத விவசாயிகளின் ஒப்புதலைப் பெற வேண்டும். மாற்றாக தரிசு நிலங்களை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறனார்.






