search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புதிய நிபந்தனை விதித்த தீயணைப்புத் துறை: 1500 பட்டாசு கடைகளை திறக்க முடியாமல் வியாபாரிகள் தவிப்பு
    X

    புதிய நிபந்தனை விதித்த தீயணைப்புத் துறை: 1500 பட்டாசு கடைகளை திறக்க முடியாமல் வியாபாரிகள் தவிப்பு

    • இந்த ஆண்டு பட்டாசு கடை திறப்பதற்கு கடைகளை தயார் செய்து வியாபாரிகள் தீயணைப்புத் துறையில் விண்ணப்பித்து இருந்தனர்.
    • கோடிக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகளை விற்க முடியாமல் பரிதவித்து வருவதாக வியாபாரிகள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 12-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு குடும்பத்திலும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து மகிழ்வது வழக்கம்.

    இதற்காக ஒவ்வொரு கடை வீதிகளிலும் பட்டாசு கடை தற்காலிகமாக திறக்கப்பட்டு பட்டாசு விற்பனை நடைபெறுவது உண்டு. இதற்காக வியாபாரிகள் தீயணைப்புத் துறையில் தடையில்லா சான்று (என்.ஓ.சி.) வாங்கி கடையை திறப்பது வழக்கம். அதை வைத்து போலீசில் அனுமதி வாங்குவார்கள்.

    அதே போல் இந்த ஆண்டு பட்டாசு கடை திறப்பதற்கு கடைகளை தயார் செய்து வியாபாரிகள் தீயணைப்புத் துறையில் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் இதில் கான்கிரீட் கட்டிடமாக இருக்கும் கடைகளுக்கு மட்டும் தீயணைப்புத் துறையில் இருந்து என்.ஓ.சி. (தடையில்லா சான்று) வழங்கி உள்ளனர்.

    'தகர ஷீட்' போடப்பட்ட கடைகளுக்கு என்.ஓ.சி. தர முடியாது என்று தீயணைப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். இதனால் சென்னையில் தற்காலிக பட்டாசு கடை திறக்க முடியாமல் 1500 வியாபாரிகள் தவித்து வருகின்றனர்.

    சென்னை பாண்டி பஜாரில் பட்டாசு கடை நடத்தும் வியாபாரிகள் கூறுகையில், கடந்த 25 வருடங்களாக நாங்கள் பட்டாசு கடை நடத்தி வருகிறோம். அதற்கான லைசென்ஸ் எங்களிடம் உள்ளது.

    ஆனால் இந்த ஆண்டு பட்டாசு கடைக்கு தீயணைப்புத் துறை அதிகாரிகள் புது நிபந்தனை விதித்து உள்ளனர். தகர ஷீட் உள்ள கடைகளுக்கு அனுமதி இல்லை என்று கூறுகிறார்கள்.

    25 வருடமாக எல்லோரும் தகர ஷீட் அமைத்துதான் தற்காலிக கடை நடத்தி வருகிறோம். அப்போதெல்லாம் கிடைத்த அனுமதி இப்போது வழங்க மறுப்பது ஏன்?

    நாங்கள் செலவு செய்து லைசென்ஸ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கடையை தயார் செய்து வைத்துள்ளோம்.

    ஆனால் தீயணைப்புத் துறையினர் திடீரென புது நிபந்தனை விதிக்கின்றனர். இதை முன்கூட்டியே வியாபாரிகளுக்கு அவர்கள் தெரியப்படுத்தி இருக்க வேண்டும்.

    சென்னையில் மட்டும் சுமார் 2 ஆயிரம் விண்ணப்பங்கள் அனுமதிக்காக கேட்கப்பட்டிருந்த நிலையில் 300 கான்கிரீட் கடைகளுக்கு மட்டும்தான் லைசென்ஸ் வழங்கியுள்ளனர். 1500-க்கும் மேற்பட்ட தகரஷீட் கடைகளுக்கு அனுமதி இல்லை என கூறி வருகின்றனர்.

    இதை முன்கூட்டியே தீயணைப்புத் துறையினர் அறிவிக்காதது ஏன்? என்று தெரியவில்லை. தீபாவளிக்கு இன்னும் ஒருவாரம் தான் உள்ளது. இன்னும் லைசென்ஸ் வழங்காமல் கடைக்காரர்களை அலைக்கழிக்கிறார்கள். இதனால் கோடிக்கணக்கான மதிப்புள்ள பட்டாசுகளை விற்க முடியாமல் பரிதவித்து வருகிறோம் என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தீயணைப்புத் துறை இணை இயக்குனர் பிரியா கூறுகையில், தகர ஷீட் கடைகளுக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக இன்று முடிவெடுப்பதாக தெரிவித்தார்.

    பட்டாசு கடை அமைக்க தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 5,200 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் அந்த விண்ணப்பங்கள் விரைந்து பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் தகுதியான விண்ணப்பங்களுக்கு அனுமதி வழங்கி வருவதாகவும் அதிகாரி பிரியா தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×