search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செம்மஞ்சேரி, நீலாங்கரை பகுதிகளுக்கு ராட்சத குழாய் குடிநீர் விநியோகம் எப்போது?- எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மக்கள்
    X

    செம்மஞ்சேரி, நீலாங்கரை பகுதிகளுக்கு ராட்சத குழாய் குடிநீர் விநியோகம் எப்போது?- எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மக்கள்

    • பழைய மகாபலிபுரம் சாலையையொட்டிய சிலபகுதிகளில் ஏற்கனவே குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.
    • ராட்சத குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது.

    கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு புதியதாக குழாய்கள் மூலம் குடிநீர் வழங்க வேண்டும் என அப்பகுதி பொது மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் செம்மஞ்சேரி யில் 51 ஆயிரம் பேருக்கு 2025- டிசம்பர் மாதத்துக்குள் குழாய் மூலம் குடிநீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. நெம்மேலி கடல் நீரை குடி நீராக்கும் ஆலையில் இருந்து தண்ணீரை சுத்திகரிப்பு செய்து குழாய் மூலம் குடிநீர் வழங்கும் வசதிகள் செய்யப்பட உள்ளது.

    துரைப்பாக்கம், செம்மஞ்சேரி, நீலாங்கரை, கொட்டிவாக்கம் உள்ளிட்ட பகுதி பொதுமக்களுக்கு 2 ஆண்டுகளில் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணிகளில் சென்னை குடிநீர் வாரியம் தீவிரமாக ஈடுபட்டு உள்ளது.

    ராஜீவ்காந்தி சாலை மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையையொட்டிய சிலபகுதிகளில் ஏற்கனவே குழாய் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் செம்மஞ்சேரி மற்றும் நீலாங்கரை பகுதிகளில் 2025-ம் ஆண்டு இறுதிக்குள் குழாய் குடிநீர் வழங்கப்பட உள்ளது. பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பல பகுதிகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கொட்டிவாக்கத்தில் ஏற்கனவே உள்ள பழைய குழாய்களை மாற்றி சீரமைக்கும் பணிகள் பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளன.

    சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் கொட்டி வாக்கத்தில் ராட்சத குழாய்கள் பதிக்கும் பணியை தொடங்கி உள்ளது.

    குழாய் குடிநீர் வழங்கும் திட்டம் மூலம் 2026-ல் ஒரு நாளைக்கு 5.3 மில்லியன் லிட்டர் தண்ணீர் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. செம்மஞ்சேரி பகுதிக்கு 2025- டிசம்பரில் ரூ.46 கோடி செலவில் விரிவான குழாய் குடிநீர் விநியோகம் செய்யப்பட உள்ளது. சுமார் 51 ஆயிரம் மக்களுக்கு ஒரு நாளைக்கு 7.9 மில்லியன் லிட்டர் குடிதண்ணீர் வழங்கப்பட உள்ளது.

    இதற்காக ராட்சத பெரிய பைப்லைன்கள் பதிக்கப்பட உள்ளது. துரைப்பாக்கம், பெருங்குடி உள்ளிட்ட ஐ.டி. சாலை பகுதிகளில் 500 மி.மீ. சுற்றளவு கொண்ட ராட்சத குடி குழாய்கள் அமைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக சாலையோர பகுதிகளில் தற்போது ராட்சத குடிநீர் குழாய்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கரைச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

    இப்பகுதிகளில் தற்போது ஐ.டி. கம்பெனிகள் ஏராளம் பெருகி உள்ளன. இப்பகுதியின் மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் வசதிகளை தமிழக அரசு செய்து தர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தோம்.

    அதன் அடிப்படையில் தற்போது நெம்மேலி கடல்நீரை குடி நீராக்கும் திட்டத்தின் கீழ் கடல் தண்ணீரை சுத்தி கரித்து குழாய் மூலம் இப்பகுதி மக்களுக்கு வழங்குவதற்கான பணிகள் தற்போது தொடங்கி உள்ளது பெரும் மகிழ்ச்சியை தருகிறது.

    இந்த பணிகள் விரைவாக செயல் படுத்தப்பட்டு பொது மக்கள் அனைவருக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களின் நீண்ட நாள் கனவு குழாய் குடிநீர் திட்டம் மூலம் விரைவில் இப்பகுதிக்கு குடி தண்ணீர் கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என ஆவலுடன் எதிர் பார்த்து வருகிறோம்.

    இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ஐ.டி. கம்பெனிகள் நிறைந்துள்ள பழைய மகாபலிபுரம் சாலை, மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகளில் வாழும் மக்களின் குடிநீர் தேவைக்காக சென்னை குடிநீர் வாரியம் சிறப்பு திட்டங்களை செய்து வருகிறது.

    நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் தண்ணீரை சுத்திகரித்து இப்பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் குடிதண்ணீரை வழங்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக ராட்சத குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் இப்பகுதி மக்களுக்கு குழாய்கள் மூலம் குடிதண்ணீர் வழங்கப்படும்.

    இந்த தண்ணீர் இப்பகுதி மக்களுக்கு போதுமானதாக இருக்கும். இப்பகுதி மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய குடிநீர் வாரியம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×