search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிகிச்சைக்கு வந்தவர்கள் ஊழியரானது எப்படி?- விக்கிரவாண்டி ஆசிரம ஊழியர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
    X

    சிகிச்சைக்கு வந்தவர்கள் ஊழியரானது எப்படி?- விக்கிரவாண்டி ஆசிரம ஊழியர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

    • விக்கிரவாண்டி ஆசிரம ஊழியர்கள் பிஜூ ஆனந்த், பூபாலன், முத்துமாரி, கோபிநாத், அய்யப்பன், தாஸ், சதிஷ் ஆகிய 7 பேரும் ஆசிரமத்திற்கு சிகிச்சைக்காக வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
    • சிகிச்சைக்கு பின் குணமடைந்த அவர்களை அங்கேயே பணியாளர்களாக நியமித்து மாத சம்பளம் கொடுத்து வந்துள்ளார் ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி.

    விக்கிரவாண்டி:

    கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்தவர் ஜூபின் பேபி.

    இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள குண்டலப்புலியூரில் ஆசிரமத்தை தொடங்கினார். அங்கு 2021-ம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட திருப்பூரை சேர்ந்த ஜபருல்லா மாயமானது குறித்து அவரது உறவினர் கெடார் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் கண்டு பிடிக்காத நிலையில் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செயதனர்.

    கோர்ட்டு உத்தரவின் படி கடந்த 10-ந்தேதி செஞ்சி டி.எஸ்.பி. பிரியதர்ஷினி தலைமையிலான போலீசார் ஆசிரமத்தில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 145 பேர் தங்க வைக்கப்பட்டு இருந்ததும் ஆசிரமம் அனுமதியின்றி செயல்பட்டதும் தெரிய வந்தது.

    ஆசிரமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சிலருக்கு பாலியல் தொந்தரவு, சித்ரவதை மற்றும் பலர் காணாமல் போனதாக புகார்கள் அளித்தனர். இது குறித்து தனித்தனி புகாரின் பேரில் கெடார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதனை தொடர்ந்து ஆசிரம நிர்வாக ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா மற்றும் ஊழியர்கள் உள்பட 9 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அசிரமத்திலிருந்த ஜபருல்லா உள்பட 53 பேரை பெங்களூருவில் ஜூபின் பேபி நண்பர் ஆட்டோ ராஜா நடத்தும் காப்பகத்துக்கு அனுப்பி வைத்ததாகவும், அதில் 11 பேர் தப்பி ஓடி விட்டதாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து கெடார் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஆவணங்களை செஞ்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர ஜோதி, கஞ்சனூர் இன்ஸ்பெக்டர் தங்கம் ஆகியோர் விழுப்புரத்தில் உள்ள சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரேவதியிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பொருட்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சி.பி.சி,ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் விசாரணையை தொடங்கினார்கள்.

    விக்கிரவாண்டி ஆசிரம ஊழியர்கள் பிஜூ ஆனந்த், பூபாலன், முத்துமாரி, கோபிநாத், அய்யப்பன், தாஸ், சதிஷ் ஆகிய 7 பேரும் ஆசிரமத்திற்கு சிகிச்சைக்காக வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. சிகிச்சைக்கு பின் குணமடைந்த அவர்களை அங்கேயே பணியாளர்களாக நியமித்து மாத சம்பளம் கொடுத்து வந்துள்ளார் ஆசிரம நிர்வாகி ஜூபின் பேபி.

    அவர்களை வீட்டிற்கும் அனுப்பாமல் அங்கேயே அறை ஒதுக்கி ஆசிரமத்தின் ரகசியங்களை வெளியே சொல்லாமல் இருக்கவும், அங்கு நடக்கும் சம்பவங்களுக்கு துணையாகவும் ஆசிரமத்தை பாதுகாக்கவும் அவர்களை பயன்படுத்தி கொண்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×