search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரூ.70 லட்சம் பணத்தை தேடி தனிப்படை போலீசார் மீண்டும் அரியானா விரைந்தனர்
    X

    ரூ.70 லட்சம் பணத்தை தேடி தனிப்படை போலீசார் மீண்டும் அரியானா விரைந்தனர்

    • கும்பல் தலைவன் ஆரிப் மற்றும் ஆஜாத் ஆகிய இருவரையும் கடந்த 22-ந் தேதி போலீசார் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்
    • திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கியை குறி வைத்து கொள்ளையடிக்க பலமுறை நோட்டமிட்டுள்ளனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12-ந் தேதி 4 ஏடிஎம்களை கியாஸ் வெல்டிங் மெஷின் மூலம் உடைத்து ரூ.73 லட்சத்தை மர்மகும்பல் கொள்ளையடித்தது.

    இதுதொடர்பாக வடக்கு மண்டல ஐஜி கண்ணன் தலைமையில் 5 மாவட்ட எஸ்பிக்கள் கொண்ட 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. கர்நாடகம், குஜராத், ஹரியானா ஆகிய மாநிலங்களுக்கு தப்பிய கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படையினர் முகாமிட்டனர்.

    இதில், கொள்ளை கும்பலின் மூளையாக செயல்பட்ட அரியானா மாநிலத்தை சேர்ந்த முகமது ஆரிப்(வயது 35), ஆஜாத்(37) ஆகிய 2 பேரை துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.3 லட்சம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    அதேபோல் கர்நாடக மாநிலம் கோலாரில் (கேஜிஎப்), ஒரு லாட்ஜில் கொள்னை கும்பல் தங்கியிருந்து கொள்ளைக்கு திட்டமிடவும், பண பறிமாற்றம் செய்யவும் உதவியாக இருந்த கொள்ளை கும்பலை சேர்ந்த கோலார் மகாலட்சுமி லேஅவுட் பகுதியை சேர்ந்த குர்தீஷ் பாஷா(43), அசாம் மாநிலம் லாலாப்பூரை சேர்ந்த அஷ்ரப் உசேன்(26) ஆகியோரையும் கைது செய்தனர்.

    கும்பல் தலைவன் ஆரிப் மற்றும் ஆஜாத் ஆகிய இருவரையும் கடந்த 22-ந் தேதி போலீசார் 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    அதன்படி கோர்ட் அனுமதித்த 7 நாட்கள் இன்றுடன் நிறைவடைகிறது. அதையொட்டி, இன்று திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இருவரையும் ஆஜர்படுத்த உள்ளனர். கொள்ளையர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, கொள்ளையடித்த ரூ.70 லட்சத்தை அரியானாவில் பதுக்கி வைத்துள்ளது தெரியவந்துள்ளது.

    மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் வங்கியை குறி வைத்து கொள்ளையடிக்க பலமுறை நோட்டமிட்டுள்ளனர். அது சாத்தியமில்லை என தெரிந்த பிறகே ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளையடிக்கும் முடிவுக்கு வந்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    முதலில் வங்கியில் மிகப்பெரிய கொள்ளையடிக்க திட்டமிட்டோம்.அதை கொண்டு செல்வதற்காக காரை திருடினோம்.

    குறிப்பிட்ட இடத்திலிருந்து கண்டெய்னர் லாரியில் பணத்தை அரியானா கொண்டு செல்லவும் ஏற்பாடு செய்தோம்.வங்கியில் அவ்வளவு பெரிய தொகை கொள்ளையடிக்க முடியாது என்பதால் திட்டத்தை மாற்றிக் கொண்டு ஏடிஎம்களில் கொள்ளையடித்தோம்.

    தடயங்களை அழிப்பதற்காக ஏ.டி.எம். எந்திரங்களை தீயிட்டும் தொடர்ந்து திட்டமிட்டபடி சோதனை சாவடிகள் இல்லாத வழியாக தப்பிச் சென்றோம். கோலாரிலிருந்து கண்டெய்னர் லாரி மூலம் பணத்தை அரியானாவுக்கு கொண்டு சென்றோம் என தெரிவித்துள்ளனர்.

    போலீஸ் விசாரணையில் ரூ.70 லட்சம் பதுக்கி வைத்திருக்கும் இடம் குறித்து தகவலை தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தனிப்படையினர் அரியானா மாநிலத்திற்கு விரைந்தனர். அங்கு பணம் பதுக்கி உள்ள நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    அடுத்த கட்டமாக கர்நாடக மாநிலம் கோலாரில் கைதான இருவரையும் போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

    Next Story
    ×