search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆண்டிபட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து மன நலம் பாதித்த வாலிபர் பலி
    X

    ஆண்டிபட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து மன நலம் பாதித்த வாலிபர் பலி

    • மாளிகைப்பாறை பூசாரி கார்மேகத்தைப் பற்றி அறிந்த ஆறுமுகம் அவரிடம் தனது மகனை சிகிச்சைக்கு அழைத்து வந்தார்.
    • தண்ணீரிலேயே இறந்து விட்டதால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா வருசநாடு அருகே உள்ள உப்புத்துறையைச் சேர்ந்தவர் கார்மேகம் (வயது 48). இவர் அங்குள்ள மாளிகைப்பாறை கருப்பசாமி கோவில் பூசாரியாக உள்ளார். மேலும் தனது தோட்டத்தில் மூலிகைகளைக் கொண்டு மனநலம் பாதித்தவர்கள், மூட்டு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சித்த வைத்தியம் மூலம் சிகிச்சை அளித்து வருகிறார்.

    சதுரகிரி கோவிலுக்கு செல்லும் சாலையில் உள்ள இவரது தோட்டத்தில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் விழுப்புரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் வெங்கடேசன் (22) என்பவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தது. மாளிகைப்பாறை பூசாரி கார்மேகத்தைப் பற்றி அறிந்த ஆறுமுகம் அவரிடம் தனது மகனை சிகிச்சைக்கு அழைத்து வந்தார்.

    நேற்று மாலை அங்குள்ள தோட்டத்தில் வெங்கடேசன் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென தரைமட்ட கிணற்றில் தவறி விழுந்தார். உடனே அருகில் இருந்த ஆறுமுகம் அவரை மீட்க முயன்றார். கிணறு ஆழமாக இருந்தது. கிணற்றில் இருந்த படிக்கட்டில் தொங்கிபடியே வெங்கடேசன் அலறினார். உடனே ஆறுமுகம் அருகில் இருந்தவர்களை அழைத்து வருவதற்காக சென்றார்.

    ஆனால் அதற்குள் வெங்கடேசன் தண்ணீரில் மூழ்கினார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் மயிலாடும்பாறையில் இருந்து தீயணைப்பு வீரர்களும் அங்கு விரைந்தனர். அவர்கள் இரவு 11 மணி வரை வெங்கடேசனை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அதன் பிறகு வெங்கடேசன் உடல் கயிறு கட்டி வெளியே மீட்கப்பட்டது. தண்ணீரிலேயே இறந்து விட்டதால் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து பூசாரி கார்மேகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×