search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை விமான நிலையத்தில் 35 பயணிகளை ஏற்றாமல் சென்ற அபுதாபி விமானம்- பயணிகள் போராட்டத்தால் பரபரப்பு
    X

    சென்னை விமான நிலையத்தில் 35 பயணிகளை ஏற்றாமல் சென்ற அபுதாபி விமானம்- பயணிகள் போராட்டத்தால் பரபரப்பு

    • விமானம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
    • 35 பயணிகளும், சென்னை விமான நிலையத்திற்குள் அமர்ந்து திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆலந்தூர்:

    அபுதாபியில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு இரவு 7 மணிக்கு வரும் ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மீண்டும் இரவு 7:45 மணிக்கு அபுதாபிக்கு புறப்பட்டு செல்லும்.

    நேற்று அந்த விமானத்தில் சென்னையில் இருந்து அபுதாபிக்கு செல்வதற்கு 182 பயணிகள் செல்ல இருந்தனர். அவர்கள் அனைவரும் மாலை 4:30 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து விட்டு, பாதுகாப்பு சோதனைகள் உட்பட அனைத்து சோதனைகளையும் முடித்து பயணம் செய்ய தயாராக இருந்தனர்.

    இந்த நிலையில் ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானம், நேற்று இரவு 7 மணிக்கு சென்னையில் தரையிறங்க வந்து கொண்டிருந்தபோது சென்னை விமான நிலையப் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் அந்த விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. மேலும் விமானம் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது பற்றி சென்னையில் உள்ள பயணிகளுக்கு முறையாக தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. அது பற்றிய அறிவிப்பும் கொடுக்கவில்லை. ஆனால் விமானம் தாமதமாக புறப்பட்டுச் செல்லும் என்று மட்டும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த விமானத்தில் அபுதாபிக்கு வேலைக்காக செல்லும் 5 பெண்கள் உட்பட,35 பேர் ஒரு குழுவாக இருந்தனர். மற்ற பயணிகள் தனியாக இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையே நள்ளிரவு 12 மணி வரையும் அபுதாபி விமானம் பற்றி எதுவும் அறிவிக்காததால் தனியாக இருந்த பெண்கள் உள்பட 35 பயணிகளும் ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் கவுண்டரில் விபரம் கேட்டனர். அப்போது அவர்கள் செல்லக்கூடிய விமானம் மற்ற பயணிகளுடன் நள்ளிரவு 12:18 மணிக்கு சென்னையில் இருந்து, அபுதாபிக்கு புறப்பட்டு சென்று விட்டதாக தெரிவித்தனர். மேலும் இனிமேல் எதுவும் செய்ய முடியாது. உங்கள் போர்டிங் கேன்சல் ஆகிவிட்டது. நீங்கள் முறைப்படி பணத்தை திரும்ப பெற்று புதிதாக டிக்கெட் முன்பதிவு செய்து வேறு விமானத்தில் பயணம் செய்யுங்கள் என்று விமான நிறுவன ஊழியர்கள் கூறினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த 35 பயணிகளும், சென்னை விமான நிலையத்திற்குள் அமர்ந்து திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விமான நிலைய ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், பயணிகளை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

    சென்னையில் இருந்து அபுதாபிக்கு இரவு 7:45-க்கு செல்ல வேண்டிய இந்த விமானம், நள்ளிரவு 12:18 மணிக்கு, 4½ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது. ஆனால் இந்த தாமதம் பற்றி பயணிகளுக்கு எந்தவிதமான அறிவிப்பும் செய்யவில்லை. மேலும் போர்டிங் பாஸ் வாங்கிய 35 பயணிகள் விமானத்தில் ஏறாதது ஏன்? என்று, விமான ஊழியர்கள் முறையாக விசாரிக்காமல் இருந்து உள்ளனர். இதுபற்றி 35 பயணிகளும் விமான நிறுவன உயர் அதிகாரிகள், சென்னை விமான நிலைய அதிகாரிகள், மற்றும் சென்னை விமான நிலைய போலீசில் புகார் செய்து உள்ளனர்.

    Next Story
    ×