என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதுநிலை படிப்புக்கான பொது நுழைவு தேர்வில் 51 பல்கலைக்கழகங்கள் பங்கேற்பு
- தேசிய தேர்வு முகமை முதுநிலை படிப்புக்கள் இடம்பெற்ற பல்கலைக்கழகங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு உள்ளது.
- நாடு முழுவதும் உள்ள 45 மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் இளநிலைப் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு.
சேலம்:
இந்தியாவின் அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு, பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு மூலமே வரும் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவான யுஜிசி உத்தரவிட்டுள்ளது.
அதன்படி 2022-ம் ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (UG) பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வுக்குரிய விண்ணப்பபதிவு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி, மே மாதம் 31-ந்தேதி முடிவடைந்தது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் தான் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர முடியும் என்பதால் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பிளஸ்-2 மாணவ-மாணவிகள் ஏராளமானோர் ஆர்வமாக விண்ணப்பித்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள 45 மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் இளநிலைப் படிப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு, வருகிற ஜூலை முதல் வாரத்தில் நடைபெறுகிறது.
இதனைதொடர்ந்து முதுநிலை (PG) படிப்புக்கான பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இதைெயாட்டி தேசிய தேர்வு முகமை முதுநிலை படிப்புக்கள் இடம்பெற்ற பல்கலைக்கழகங்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு உள்ளது.
இதில் மத்திய பல்கலைக்கழங்கள் உள்பட மொத்தம் 51 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த வகையில் திருவாரூரில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகம் உள்பட 36 மத்திய பல்கலைக்கழகங்கள், 8 மாநில பல்கலைக்கழகங்கள், 2 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், 5 தனியார் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளது. இதில் புதிதாக தனியார் பல்கலைக்கழங்களும் சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.






