search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    3-வது நாளாக தொடர் போராட்டம்- கீழ் பவானி வாய்க்காலில் இறங்கி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    3-வது நாளாக தொடர் போராட்டம்- கீழ் பவானி வாய்க்காலில் இறங்கி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • முடிக்கப்படாத கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
    • பழையகோட்டை பகுதி கீழ்பவானி பாசனதாரர்கள், குடிநீர் ஆதாரம் பெறும் கிராம மக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    ஈரோடு:

    கீழ்பவானி வாய்க்காலில் காங்கிரீட் அமைக்க, பாசனதாரர்கள், குடிநீர் ஆதாரம் பெறும் கிராம மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நீர்வளத் துறை சார்பில் வாய்க்காலில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதில், அரசு உத்தரவுக்கு மாறாக மண் கரைகளை சேதப்படுத்தியும், மரங்களை வெட்டியும், அரசு அதிகாரிகளும், ஒப்பந்தாரர்களும் செயல்பட்டு வருவதைக் கண்டித்து ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த கீழ்பவானி பாசன பாதுக்காப்பு இயக்கத்தினர் நேற்று முன்தினம் முதல் தினமும் ஒரு பகுதியில் கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

    அதன்படி 3-வது நாளாக இன்று காலை, ஈரோடு அடுத்துள்ள நத்தக்காடையூர், வெள்ளியங்காடு பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ஆகஸ்ட் 15 அன்று கீழ்பவானி வாய்க்காலில், பாசன நீர் திறந்துவிட வேண்டும்.

    நல்ல நிலையில் இருந்த மண்கரைகளை சேதப்படுத்தி, அந்த இடங்களில் கட்டுமானங்களை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் நீர்வளத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முடிக்கப்படாத கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    உண்மையான பாசன விவசாயிகளின் கருத்துகளை கேட்காமல் தயாரித்த மோகன கிருஷ்ணன் அறிக்கையை திரும்பப் பெற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கான்கிரீட் திட்டம் கோரும் அரசாணை எண்: 276ஐ அரசு உறுதியாக ரத்து செய்ய வேண்டும். 68 ஆண்டுகளாக உள்ள மக்களுக்கான மண் கரை மற்றும் மண் அணையை பாதுகாக்க வேண்டும். கரைகளில் உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்களை பாதுகாக்க வேண்டும்.

    வாய்க்கால் கரையில் மண் திருட்டு, நீர் திருட்டு மற்றும் மரங்களை வெட்டி திருடுவது மற்றும் பவானி ஆறு மாசுபடுதல் உள்ளிட்ட செயல்களுக்கு காரண மானவர்கள், அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள் மீது உறுதியான சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

    இதில், கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை, இயற்கை ஆர்வலர் பொடாரன், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி செங்கோட்டையன் மற்றும் வெள்ளியங்காடு, மருதுறை, நத்தக்காடையூர், பழையகோட்டை பகுதி கீழ்பவானி பாசனதாரர்கள், குடிநீர் ஆதாரம் பெறும் கிராம மக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×