search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தாளவாடியில் விவசாயியை அடித்து கொன்ற ஒற்றை யானையை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைப்பு
    X
    ஒற்றை யானையை விரட்ட ஆனைமலையில் இருந்து இன்று காலை சின்னதம்பி என்ற கும்கி யானை தாளவாடி பகுதிக்கு லாரி மூலம் கொண்டு வரப்பட்டது.

    தாளவாடியில் விவசாயியை அடித்து கொன்ற ஒற்றை யானையை பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைப்பு

    • தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட இரிபுரம், திகனாரை, மல்குத்திபுரம், தர்மாபுரம் பகுதிகளில் கடந்த 1 மாதமாக ஒற்றை யானை ஒன்று விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.
    • அவ்வப்போது ஒற்றை யானையை விரட்ட செல்லும் வனஊழியர்களையும் அந்த யானை தாக்கி வருகிறது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் மான், சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறி வருகிறது. குறிப்பாக லாரியில் ஏற்றி செல்லப்படும் கரும்புகளை ருசிப்பதற்காக யானைகள் கூட்டம் கூட்டமாக சாலையோரங்களில் காத்திருக்கிறது.

    மேலும் சாலையில் வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி கரும்பு இருக்கிறதா? என்று யானைகள் தேடி வருகிறது.

    இதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு யானை கூட்டம் பயணிகளை ஏற்றி சென்ற அரசு பஸ்சை விரட்டியது. டிரைவர் சாதுர்யமாக பஸ்சை பின்நோக்கி சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் இயக்கி யானைகளிடம் இருந்து தப்பித்த சம்பவம் நடந்தது.

    இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்குட்பட்ட இரிபுரம், திகனாரை, மல்குத்திபுரம், தர்மாபுரம் பகுதிகளில் கடந்த 1 மாதமாக ஒற்றை யானை ஒன்று விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

    அவ்வப்போது ஒற்றை யானையை விரட்ட செல்லும் வனஊழியர்களையும் அந்த யானை தாக்கி வருகிறது. இந்த நிலையில் தர்மபுரம் கிராமத்தை சேர்ந்த மல்லப்பா என்ற விவசாயி தனது தோட்டத்தில் இரவு காவல் பணி மேற்கொண்டார். அப்போது அவரது தோட்டத்துக்கு வந்த ஒற்றை யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை சேதப்படுத்தியது.

    சத்தம் கேட்டு அங்கு சென்ற விவசாயி மல்லப்பாவை யானை தாக்கி கொன்றது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒற்றை யானையை பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வனத்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் யானை தாக்கி இறந்த விவசாயி மல்லப்பா உடலையும் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து போாட்டம் நடத்தினர்.

    இதையடுத்து வனத்துறையினர் ஒற்றை யானையை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    இதற்கிடையே தாளவாடி பகுதியில் அட்டகாசம் செய்து வரும் ஒற்றை யானையை பிடிப்பது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் மனித உயிர்களையும், விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வரும் ஒற்றை யானையை கும்கி யானைகள் மூலம் பிடிக்க முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சின்னதம்பி, ராஜவர்தன் ஆகிய 2 கும்கி யானைகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி சின்னதம்பி என்ற கும்கி யானை வனத்துறை லாரி மூலம் ஏற்றப்பட்டு இன்று காலை தாளவாடி பகுதிக்கு வந்தடைந்தது.

    இன்று மாலைக்குள் மற்றொரு கும்கி யானை ராஜவர்தன் கொண்டு வரப்படுகிறது. இதையடுத்து 2 கும்கி யானைகள் மூலம் ஒற்றை யானையை பிடிக்கும் பணியை வனத்துறையினர் தொடங்க உள்ளனர். ஒற்றை யானையை பிடிக்க கும்கி வரவழைக்கப்பட்டுள்ளதால் தாளவாடி பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×