என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு 17 வழித்தடங்கள் அறிவிப்பு- 16,500 போலீசார் பாதுகாப்பு
- விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் உதவி மையங்களை போலீசார் அமைத்துள்ளனர்.
- கட்டுப்பாடுகளை மீறுவோர், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சென்னை:
விநாயகர் சதுர்த்தி கடந்த 7-ந் தேதி அன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னையில் இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் 1,524 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். இந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கு 11-ந் தேதி (அதாவது இன்று) மற்றும் வருகிற 14 (சனிக்கிழமை), 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 3 நாட்கள் போலீசார் அனுமதி வழங்கி உள்ளனர்.
எனினும் சில இடங்களில் விநாயகர் சதுர்த்தி பண்டிகை முடிந்தவுடன் சிலைகள் கரைக்கப்பட்டன. இன்று 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளன.
சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு போலீசார் தரப்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்து முன்னணி, சிவசேனா, இந்து மக்கள் கட்சி உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் நிறுவப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலம் வரும் 15-ந் தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற உள்ளது. எனவே அன்றைய தினம் எந்தவித அசம்பாவித சம்பவமும் நிகழாமல், அமைதியான முறையில் ஊர்வலம் நடைபெறும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின் பேரில் 16 ஆயிரத்து 500 போலீசாரும், 2 ஆயிரம் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு 17 வழித்தடங்களையும் போலீசார் அறிவித்துள்ளனர். அதன்படி நுங்கம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், சவுகார்ப்பேட்டை, அயனாவரம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை, தியாகராயநகர், எம்.ஜி.ஆர்.நகர், வடபழனி, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், கொளத்தூர், திருமங்கலம், மதுரவாயல், கோயம்பேடு, அரும்பாக்கம் ஆகிய இடங்கள் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக ஊர்வலமாக எடுத்து வந்து பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் கடலில் கரைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதே போன்று அடையார், கிண்டி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், நங்கநல்லூர், வேளச்சேரி, திருவான்மியூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை நீலாங்கரை பல்கலைநகர் கடலிலும், வடசென்னை பகுதிகளான தங்கச்சாலை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்ப்பேட்டை, ஆர்.கே.நகர், கொடுங்கையூர், மாதவரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள சிலைகளை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலும், திருவொற்றியூர் மற்றும் அதன் அருகே உள்ள இடங்களில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் உள்ள கடலிலும் கரைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் உதவி மையங்களை போலீசார் அமைத்துள்ளனர். சிலைகளை கரைப்பதற்கு ராட்சத கிரேன்களும், படகுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவசர உதவிக்கு சிலைகள் கரைக்கும் இடங்களில் தீயணைப்பு, ஆம்புலன்சு வாகனங்கள், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும், குதிரைப்படைகள் மூலமாகவும், கடற்கரை ரோந்து வாகனங்கள் மூலமாகவும் பாதுகாப்பு ஏற்காடுகளை போலீசார் கண்காணிக்க உள்ளனர். விநாயகர் சிலைகள் ஊர்வலத்துக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், நிபந்தனைகள், உரிய வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், அமைதியான முறையில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஊர்வலமாக சென்று சிலைகளை கரைத்து, முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
கட்டுப்பாடுகளை மீறுவோர், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.






