search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    4 டி.எம்.சி. கிருஷ்ணா நீர் திறப்பை நிறுத்தி வையுங்கள்- ஆந்திரா அரசுக்கு தமிழக அதிகாரிகள் கடிதம்
    X

    4 டி.எம்.சி. கிருஷ்ணா நீர் திறப்பை நிறுத்தி வையுங்கள்- ஆந்திரா அரசுக்கு தமிழக அதிகாரிகள் கடிதம்

    • தண்ணீர் திறக்கப்பட்டால் அதனை தேக்கி வைக்க ஏரிகளில் இடமில்லை.
    • ஏரிகளில் போதிய தண்ணீர் இருப்பதால் கிருஷ்ணா நதி நீர் திறப்பை நிறுத்தி வைக்க கூறி உள்ளோம்

    ஊத்துக்கோட்டை:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி ஏரி உள்ளது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கன அடி ஆகும்.

    பூண்டி ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும்போது சென்னை குடிநீருக்காக புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்படும்.

    தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையால் பூண்டி ஏரி முழு கொள்ளவை எட்டியது. மேலும் கண்டலேறு அணையில் இருந்தும் தொடர்ந்து கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதையடுத்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகின்றன.

    கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை பூண்டி ஏரிக்கு அனுப்ப வேண்டும்.

    ஜூலை முதல் அக்டோபர் வரை முதல் தவணையில் 8 டி.எம்.சி.யும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி. தண்ணீரும் வழங்க வேண்டும்.

    ஏற்கனவே சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல், செம்பரம்பாக்கம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகளில் போதுமான அளவு தண்ணீர் உள்ளது. இதனால் தற்போது வந்து கொண்டு இருக்கும் கிருஷ்ணா தண்ணீரையே தேக்கி வைக்க முடியாத நிலை நிலவுகிறது. இதனால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டும் என்று கடந்த மாதமே தமிழக அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    இதற்கிடையே கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தப்படி இந்த மாதம் (ஜனவரி) முதல் ஏப்ரல் வரையிலான 2வது தவணையாக வழங்க வேண்டிய 4 டி.எம்.சி. தண்ணீர் திறப்பை நிறுத்தி வைத்து விட்டு சில மாதங்கள் கழித்து திறக்க வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் ஆந்திர அரசுக்கு மீண்டும் கடிதம் எழுதி உள்ளனர்.

    கண்டலேறு அணையில் இருந்து தற்போது 4 டி.எம்.சி. தண்ணீர் திறக்கப்பட்டால் அதனை தேக்கி வைக்க ஏரிகளில் இடமில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

    பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி. இதில் 2,899 மி.கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 165 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சென்னை குடிநீருக்காக லிங்க் கால்வாய் மூலம் 550 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

    புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மி.கன அடி. இதில் 3,115 மி.கன அடி தண்ணீர் உள்ளது.

    செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. இதில் 3,491 மி.கன அடி தண்ணீர் இருக்கிறது.

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழ வரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கன அடி (11.7 டி.எம்.சி.) தண்ணீர் சேமித்து வைக்கலாம். இதில் தற்போது 10 ஆயிரத்து 775 மி.கன அடி (10.7 டி.எம்.சி.) தண்ணீர் உள்ளது.

    இந்த தண்ணீரை கொண்டு இந்த ஆண்டு முழுவதும் சென்னையில் தட்டுப்பாடு இன்றி குடிநீர் சப்ளை செய்ய முடியும். ஏரிகளில் போதிய தண்ணீர் இருப்பதால் கிருஷ்ணா நதி நீர் திறப்பை நிறுத்தி வைக்க கூறி உள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×