search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் கழிவுநீர் குழாய்களில் தூர்வாரும் பணி தொடங்கியது
    X

    சென்னையில் கழிவுநீர் குழாய்களில் தூர்வாரும் பணி தொடங்கியது

    • சுரங்கப்பாதைகளில் மழைநீர் சேகரிக்கப்படும் கிணறுகளை தூர்வாரி வண்டல்களை அகற்ற வேண்டும்.
    • மோட்டார் பம்புகளை இயக்கி சரிபார்த்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    சென்னை:

    சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் 2 ஆயிரத்து 71 கி.மீ நீளமுள்ள மழைநீர் வடிகால்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் பல இடங்களில் மழைநீர் வடிகால்கள் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதை எதிர்கொள்வதற்கான தயார்நிலை குறித்து மாநகராட்சி அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் சமீபத்தில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் சிவ்தாஸ் மீனா, சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

    ஒவ்வொரு பகுதியிலும் புதிய மழைநீர் வடிகால் பணிகள் முடிந்தவுடன் அந்த மழைநீர் வடிகால்வாய்களில் உள்ள கட்டுமான கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால்வாய்களில் தூர்வாரும் பணிகளின்போது வண்டல் மண்ணை அகற்றி அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வளாகங்களில் கொட்ட வேண்டும்.

    கடந்த காலங்களில் மழை நீர் தேங்கும் 400 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் மழைநீரை வெளியேற்றுவதற்காக 400 மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    சுரங்கப்பாதைகளில் மழைநீர் சேகரிக்கப்படும் கிணறுகளை தூர்வாரி வண்டல்களை அகற்ற வேண்டும்.

    மோட்டார் பம்புகளை இயக்கி சரிபார்த்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்து உபகரணங்களையும் முன்கூட்டியே பராமரித்து தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.

    புதிதாக அமைக்கப்பட்டுள்ள வண்டல் வடிகட்டி தொட்டிகள், அதில் இருந்து மழைநீர் வடிகால்வாய்களுக்கு செல்ல இணைக்கப்பட்டுள்ள குழாய்களில் அடைப்புகள் இல்லாமல் மழை நீர் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

    அனைத்து மழைநீர் வடிகால்களும் நீர்வரத்து கால்வாய்களில் சேரும் இடங்களில் மழைநீர் தேங்காமல் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

    மழை காலங்களில் பொதுமக்கள் புகார்களை தெரிவிக்கவும், அலுவலர்களை தொடர்பு கொள்ளவும், மாநகராட்சி மற்றும் இதர சேவை துறை அலுவலர்களின் தொடர்பு எண்கள் அடங்கிய கையேட்டை தயார் செய்ய வேண்டும். மேற்கண்ட பணிகள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டன.

    இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை நெருங்குவதையொட்டி முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கழிவுநீர் செல்லும் குழாய்களில் கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் இன்று முதல் தொடங்கியது.

    சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் பகுதி அலுவலகம் 1 முதல் 15 வரை உள்ள தெருக்களில் கழிவு நீர் செல்லும் குழாய்கள் மற்றும் எந்திர நுழைவு வாயில்களில் உள்ள கசடுகளை அகற்றி தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த தூர்வாரும் பணிகள் வருகிற 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த பகுதி அலுவலகங்களுக்கு உட்பட்ட 1998 தெருக்களில் 282 தூர்வாரும் எந்திரங்கள், 161 ஜெர்ராடிங் எந்திரங்கள், 57 கழிவுநீர் உறிஞ்சும் எந்திரங்கள் என மொத்தம் 500 எந்திரங்கள் மூலம் கழிவுநீர் செல்லும் குழாய்கள் மற்றும் எந்திர நுழைவு வாயில்களில் உள்ள கசடுகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள தெருக்களில் கழிவுநீர் அடைப்பு, தெருவில் கழிவுநீர் வழிந்தோடுதல் தொடர்பான புகார்களை பகுதி அலுவலகம் மற்றும் பணிமனை அலுவலகத்தில் கொடுத்தால் உடனடியாக அவை சரிசெய்யப்படும்.

    இதற்கிடையே சென்னை குடிநீர் வாரியத்தின் கழிவு நீர் கட்டமைப்புகளில் உள்ள கசடுகளை தூர்வாரும் பணி கடந்த 4 நாட்களாக இரவு நேரங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் 200 பணிமனைகளில் உள்ள கழிவுநீர் கட்டமைப்புகளில் கசடுகளை அகற்றும் பணியில் 350 உதவி பொறியாளர்கள், 2 ஆயிரம் களப்பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    கடந்த 4 நாட்களில் 2,876 தெருக்களில் உள்ள கழிவு நீர் கட்டமைப்புகளில் கசடுகள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×