என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
- மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு தொடர்ந்து 3-வது முறையாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்துள்ளார்.
- நேற்று இரவு முதல் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் பாசனத்துக்காக திறக்கப்பட்டு வருகிறது.
சேலம்:
காவிரி டெல்டா குறுவை சாகுபடி பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு தொடர்ந்து 3-வது முறையாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்துள்ளார்.
நேற்று காலை மேட்டூர் அணையில் இருந்து முதலில் வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, நேற்று இரவு முதல் வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் பாசனத்துக்காக திறக்கப்பட்டு வருகிறது.
ஜூன் மாதம் இறுதி வரை அணையில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் பாசனத்துக்காக திறக்கப்படும். அடுத்த மாதம் வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி, ஆகஸ்டு மாதம் வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி என பாசன தேவைக்கேற்ப அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், பெரம்பலூர் அரியலூர் ஆகிய 13 டெல்டா மாவட்டங்கள் பாசன வசதி பெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதேசமயம், நேற்று காலை அணைக்கு வினா டிக்கு 867 கனஅடியாக இருந்த தண்ணீர் வரத்து, இன்று காலை 579 கன அடியாக சரிந்தது. இதேபோல், நேற்று 103.35 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 8 மணி நிலவரப்படி 102.86 அடியாக குறைந்து உள்ளது. நீர்வரத்தை விட தண்ணீர் அதிகளவு திறக்கப்படுவதால் அணை நீர்மட்டம் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.






