search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னை கடல் பகுதியில் கூட்டமாக சுற்றிய அரியவகை திமிங்கல சுறாக்கள்
    X

    சென்னை கடல் பகுதியில் கூட்டமாக சுற்றிய அரியவகை திமிங்கல சுறாக்கள்

    • சுமார் 20-க்கும் மேற்பட்ட திமிங்கல சுறாக்கள் ஒன்றாக சுற்றி வந்தன.
    • கடலின் மேற்பரப்புக்கு சுறா மீன்கள் வந்து துள்ளி குதித்து சென்றது.

    சென்னை:

    சென்னை நீலாங்கரை கடற்கரையில் இருந்து சில மீட்டர் தூரத்தில் கடந்த சில நாட்களாக அரியவகை திமிங்கல சுறா மீன்கள் அதிக அளவில் காணப்பட்டது.

    சுமார் 20-க்கும் மேற்பட்ட திமிங்கல சுறாக்கள் ஒன்றாக சுற்றி வந்தன. அப்போது கடலின் மேற்பரப்புக்கு சுறா மீன்கள் வந்து துள்ளி குதித்து சென்றது. இதனை அங்கிருந்த மீனவர்கள் பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.

    பொதுவாக திமிங்கல சுறா வகைகள் சென்னை கடலோரத்தில் அதிகம் காணப்படுவதில்லை. மேலும் கடந்த சில ஆண்டுகளில் அவை ஒன்று அல்லது இரண்டு என்ற அளவிலேயே இதுவரை பார்த்து உள்ளனர். இந்நிலையில் 20-க்கும் மேற்பட்ட திமிங்கல சுறா மீன்கள் சென்னை கடற்கரை பகுதியில் சுற்றி வருவது அனைவரையும் ஆச்சரியம் அடைய செய்து உள்ளது. இதுபற்றி அறிந்ததும் டிரீ பவுண்டேசன் அமைப்பை சேர்ந்த அதன் நிறுவனர் டாக்டர் சுப்ரஜா தாரினி, மற்றும் டிரீ பவுன்டேசனின் கடல் ஆமை பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த புகழரசன் மற்றும் நிர்வாகிகள் படகு மூலம் திமிங்கல சுறாக்கள் இருந்த கடல்பகுதிக்கு சென்றனர்.

    அப்போது புகழரசன் பாதுகாப்பு உடை அணிந்து கடலுக்குள் குதித்து திமிங்கல சுறாக்களின் செயல்பாட்டை பார்த்தார். இதில் சுமார் 15 அடி முதல் 18 அடிநீலம் உள்ள ஒரு இளம்திமிங்கல சுறா நீந்தி சென்றது. அதனை படம்பிடித்து உள்ளனர்.

    இது போன்று 20-க்கும் மேற்பட்ட திமிங்கல சுறாக்கள் சென்னை கடற்கரை பகுதியில் இருப்பது அரிதானது என்று அவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த திமிங்கல சுறாக்களை பழவேற்காடு, செம்மஞ்சேரி, கோவளம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மீனவர்களும் கடலுக்குள் சென்றபோது பார்த்து உள்ளனர்.

    இதுகுறித்து டிரீ பவுன்டேசனின் கடல் ஆமை பாதுகாப்பை சேர்ந்த டி.ஏ.புகழரசன் கூறும் போது, நீலாங்கரை மீனவர்கள் கடந்த 9-ந் தேதி காலை கடற்கரையோரத்தில் 20-க்கும் மேற்பட்ட திமிங்கல சுறா மீன்கள் இருப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து அதன் நடமாட்டம் குறித்து பார்வையிட சென்றோம். தண்ணீருக்கு அடியில் சென்று பார்த்தபோது ஒரு திமிங்கல சுறாமீன் சுமார் 15 முதல் 18 அடி நீளம் இருந்தது. அதன் வால் மற்றும் முதுகுத் துடுப்பு தெளிவாகத் தெரிந்தது. அந்த மீனில் எந்த காயமும் இல்லை. வருகிற 14-ந்தேதியுடன் மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குள் செல்வார்கள் என்பதால் இந்த திமிங்கல சுறாக்களை இனிவரும் நாட்களில் பார்ப்பது கடினம் என்றார்.

    Next Story
    ×