என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வானிலை இயல்பு நிலைக்கு திரும்பியதால் 4 நாட்களுக்குப் பிறகு கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்
- மீனவர்கள் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்தனர்.
- கடந்த 4 நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட ராமேசுவரம் துறைமுகம் இன்று வழக்கமான பரபரப்பை எட்டியது.
ராமேசுவரம்:
தமிழகத்தில் தென் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றின் வேக மாறுபாடு காரணமாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசியது. கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதனால் கடந்த 4-ந் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்தனர்.
இந்த நிலையில் ராமேசுவரத்தில் நேற்று இரவு முதல் காற்று குறைந்து கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. இதையடுத்து மீனவர்கள் கடலுக்கு செல்ல முடிவு செய்தனர். மீன்வளத்துறையும் அதற்கு அனுமதி அளித்தது. அதன்படி இன்று அதிகாலை 4 மணி அளவில் ராமேசுவரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் 500 விசைப்படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
கடந்த 4 நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட ராமேசுவரம் துறைமுகம் இன்று வழக்கமான பரபரப்பை எட்டியது. தென்கரை கடலில் காற்றின் வேகம் குறையாதால் பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
தனுஷ்கோடியிலும் இயல்புநிலை திரும்பியதால் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர்.






