search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லையில் பரவலாக மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 3 நாட்களில் 19 அடி உயர்வு
    X

    பணகுடி கன்னிமாரா ஓடையில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்

    நெல்லையில் பரவலாக மழை: பாபநாசம் அணை நீர்மட்டம் 3 நாட்களில் 19 அடி உயர்வு

    • புறநகர் பகுதிகளை பொறுத்தவரை ராதாபுரத்தில் 14 மில்லிமீட்டர் மழை பெய்தது.
    • 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 51 அடியை எட்டியுள்ளது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டு அவற்றின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணைக்கு கடந்த 2 நாட்களாக 6 ஆயிரம் கனஅடிக்கு அதிகமாக தண்ணீர் வரத்து ஏற்பட்டதால் சுமார் 15 அடி நீர்மட்டம் உயர்ந்தது. நேற்று 89 அடியாக இருந்த நிலையில், தொடர் நீர்வரத்தால் மேலும் சுமார் 4 அடி உயர்ந்து இன்று 92.75 அடியை எட்டியது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 107.61 அடியாக உள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 3247 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 51 அடியை எட்டியுள்ளது.

    அணை பகுதிகளில் அதிகபட்சமாக சேர்வாறில் 6 மில்லிமீட்டரும், பாபநாசத்தில் 8 மில்லிமீட்டரும், மணிமுத்தாறில் 0.80 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. கொடுமுடியாறு அணை பகுதியில் 12 மில்லிமீட்டர் மழை பெய்தது. 52 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் 28.75 அடி நீர் இருப்பு உள்ளது.

    புறநகர் பகுதிகளை பொறுத்தவரை ராதாபுரத்தில் 14 மில்லிமீட்டர் மழை பெய்தது. பணகுடி மேற்கு தொடர்ச்சி மலையில் சாரல் மழை பெய்து வருவதால் கன்னிமாரா தோப்பு ஓடையில் தண்ணீர் செல்கிறது. மாவட்டத்தில் பல இடங்களில் சுற்றுலா தலங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதாலும், தொடர் விடுமுறை என்பதாலும் வள்ளியூர், ராதாபுரம், பணகுடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுற்றுலா பயணிகள் கன்னிமாரா தோப்பு ஓடையில் குளிக்க இன்று காலை முதல் வந்தனர்.

    ஆனால் தொடர் சாரல் மழை காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மாஞ்சோலை வனப்பகுதியை பொறுத்தவரை காக்காச்சியில் 35 மில்லிமீட்டர் மழை பெய்தது. நாலுமுக்கில் 19 மில்லிமீட்டரும், ஊத்து பகுதியில் 15 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது.

    தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு வரும் 98 கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி 31.4 மில்லிமீட்டர் மழை பெய்தது. 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் இன்று 113.75 அடியை எட்டியுள்ளது. ராமநதி நீர்மட்டம் 63 அடியாகவும், கடனா அணையில் 55 அடியாகவும் நீர் இருப்பு உள்ளது.

    குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அதில் குளித்து மகிழ சுற்றுலா பயணிகள் கூட்டமும் அலைமோதி வருகிறது.

    Next Story
    ×