search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடலூரை புறக்கணிக்கும் ரெயில்வே நிர்வாகம்
    X

    கடலூரை புறக்கணிக்கும் ரெயில்வே நிர்வாகம்

    • கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மீண்டும் ரெயில்கள் இயக்கப்பட்டாலும், கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான ரெயில்கள் நிற்பதில்லை.
    • உழவன் எக்ஸ்பிரஸ், மன்னை எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ் மற்றும் மகால் சூப்பர் பாஸ்ட் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் விழுப்புரத்திற்கு அடுத்தபடியாக சிதம்பரம் ரெயில் நிலையத்தில் தான் நிற்கிறது.

    கடலூர்:

    போக்குவரத்தில் மிகவும் இன்றியமையாததாக இருப்பது ரெயில் போக்குவரத்து. ரெயில் பயணத்தின் போதே பொதுமக்கள், தாங்கள் பாதுகாப்பாக செல்வதை உணருகின்றனர். நீண்ட தூர பயணம் மேற்கொள்பவர்கள் ரெயிலில் செல்வதற்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இதனால் தான் ரெயில்களில் எப்போதும் பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது.

    அந்த வகையில் கொரோனா ஊரடங்குக்கு முன்பு கடலூர் வழியாக இயக்கப்பட்ட 11 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் உள்பட அனைத்து ரெயில்களிலும் அதிகளவில் பொதுமக்கள் கூட்டம் இருந்தது. இதனால் கடலூர் மாவட்ட மக்கள் பெரிதும் பயன் அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு மீண்டும் ரெயில்கள் இயக்கப்பட்டாலும், கடலூர் மாவட்டத்தில் பெரும்பாலான ரெயில்கள் நிற்பதில்லை. குறிப்பாக தினசரி இயக்கப்படும் காரைக்கால் எக்ஸ்பிரஸ் கடலூர் மாவட்டத்தில் உள்ள எந்தவொரு ரெயில் நிலையத்திலும் நிற்பதில்லை. விழுப்புரத்தில் இருந்து புறப்படும் ரெயில் கடலூர் மாவட்டத்தை கடந்து 122 கி.மீட்டர் தூரம் சென்று மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் தான் நிற்கிறது. இதனால் வேளாங்கண்ணி, காரைக்கால், நாகப்பட்டிணம் செல்லக்கூடிய கடலூர் மாவட்ட மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    மேலும் உழவன் எக்ஸ்பிரஸ், மன்னை எக்ஸ்பிரஸ், திருப்பதி எக்ஸ்பிரஸ் மற்றும் மகால் சூப்பர் பாஸ்ட் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் விழுப்புரத்திற்கு அடுத்தபடியாக சிதம்பரம் ரெயில் நிலையத்தில் தான் நிற்கிறது. கடலூர் திருப்பாதிரிப்புலியூர் மற்றும் கடலூர் துறைமுகம் ரெயில் நிலையங்களில் நிற்பதில்லை. இதேபோல் கன்னியாகுமரியில் இருந்து கடலூர் வழியாக புதுச்சேரிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நிற்பதில்லை.

    மாவட்டத்தின் தலைநகரிலேயே பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிற்காமல் செல்வதால், பொதுமக்கள் வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனால் வேறு வழியின்றி அதிக செலவு செய்து பஸ்களில் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.

    இதுகுறித்து கடலூர் மக்கள் கூறுகையில், மாவட்ட தலைநகரான கடலூரில் 2 ரெயில் நிலையங்கள் உள்ளன. ஆனால் இந்த ரெயில் நிலையங்களில் பெரும்பாலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிற்பதில்லை. கடலூரை ரெயில்வே நிர்வாகம் புறக்கணித்து வருகிறது. இதனால் ரெயில் பயணங்களை மேற்கொள்ளும் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே அனைத்து ரெயில்களும் கடலூரில் நின்று செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×