search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புரட்டாசி மாதத்தால் அதிக பயன்பாடு- காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு
    X

    கோவையில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் கேரட் விலை ரூ.110-க்கு விற்பனை ஆன காட்சி.

    புரட்டாசி மாதத்தால் அதிக பயன்பாடு- காய்கறிகள் விலை கிடுகிடு உயர்வு

    • தமிழ் மாதமான புரட்டாசியில் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்து பெருமாள், ஆஞ்சநேயர் வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம்.
    • கோழி, ஆட்டு இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது.

    கோவை:

    கோவை மாநகரில் எம்.ஜி.ஆர். மார்க்கெட், டி.கே.மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இந்த மார்க்கெட்டுகளுக்கு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், சூலூர் உள்ளிட்ட உள்ளூர் பகுதிகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தக்காளி, கத்தரி, வெண்டைக்காய், அவரை உள்பட பல்வேறு காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. நீலகிரியில் இருந்து கேரட், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளும் விற்பனைக்கு வருகிறது.

    கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக கோவையில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகள் வரத்து குறைவாகவே இருந்தது. வரத்து குறைவு காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் மற்ற நாட்களை விட ரூ.20 முதல் ரூ.30 வரை உயர்ந்துள்ளது.

    டி.கே.மார்க்கெட்டில் சாதாரண நாட்களில் கேரட் ரூ.20 முதல் ரூ.40 வரை விற்பனையாது. தற்போது வரத்து குறைவால் ஒரு கிலோ கேரட் ரூ.90க்கு விற்பனையாகி வருகிறது.

    கோவை டி.கே.மார்க்கெட்டில் விற்பனையாகும் காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-

    கேரட்-ரூ.90, பீன்ஸ்-80, மிளகாய்-ரூ.50, பீட்ரூட்-ரூ.30, முட்டைகோஸ்-ரூ.20, வெள்ளரிக்காய்-ரூ.40, முள்ளங்கி-ரூ.30, குடைமிளகாய்-ரூ.50, பாகற்காய்-ரூ.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    அவரை-ரூ.60, கத்தரிக்காய்-ரூ.40, பீர்க்கங்காய்-ரூ.50, மொச்சை-ரூ.55, புடலங்காய்-ரூ.45, கோவக்காய்-ரூ.45, சுரைக்காய்-ரூ.50, இஞ்சி-ரூ.40, சேப்பக்கிழங்கு-ரூ.50, சேனை கிழங்கு-ரூ.40, கருணை கிழங்கு-ரூ.50, தக்காளி-ரூ.40, சின்ன வெங்காயம்-ரூ.40, பல்லாரி-ரூ.20, உருளைக்கிழங்கு-ரூ.30, எலுமிச்சை-ரூ.100க்கு விற்பனையாகி வருகிறது.

    மார்க்கெட்டுகளை தவிர்த்து அங்காடிகளில் இதை விட காய்கறிகள் விலை அதிகமாக இருந்தது. காரட் ரூ.110, பீன்ஸ் 95, பீட்ரூட் ரூ.75-க்கு விற்பனை ஆனது.

    மழை காரணமாக மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. 10 மூட்டை காய்கறிகள் வர வேண்டிய இடத்தில் பாதிக்கு பாதியாக 5 மூட்டை காய்கறிகள் மட்டுமே வருகிறது. இதன் காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த 3 மாத காலமாகவே காய்கறிகளின் விலை சற்று உயர்வாகவே இருந்து வருகிறது.

    தற்போது தான் மழை குறைந்து, மார்க்கெட்டுக்கு காய்கறிகளின் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் இன்னும் காய்கறி வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. அப்போது காய்கறியின் விலையும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ் மாதமான புரட்டாசியில் பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்து பெருமாள், ஆஞ்சநேயர் வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம்.

    தற்போது புரட்டாசி மாதம் தொடங்கி உள்ளதால் கோவை உக்கடம் மொத்த மீன் சந்தை, சில்லறை மீன் சந்தைகளில் நேற்று விற்பனை மந்தமாக காணப்பட்டது. விற்பனை குறைவாக காணப்பட்டதால் மீன்களின் விலையும் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை குறைந்து விட்டது.

    கோவையில் ராமநாதபுரம், சிங்காநல்லூர், செல்வபுராம், சரவணம்பட்டி, காந்திபுரம் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் உள்ள கோழி, ஆட்டு இறைச்சி கடைகளிலும் மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. நுகர்வு குறைவால் இறைச்சி விலையும் குறைந்தது.

    கடந்த வாரங்களில் ரூ.270க்கு விற்ற 1 கிலோ கோழி இறைச்சி ரூ.70 குறைந்து ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆட்டிறைச்சி 1 கிலோ ரூ.700க்கு விற்பனை செய்யப்பட்டது.

    புரட்டாசி மாதம் முடியும் வரை இறைச்சி நுகர்வு குறைவாக இருக்கும் என்றும் இதனால் விலை 50 சதவீதம் அளவுக்கு குறையும் எனவும் இறைச்சி வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×