search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    செங்கோட்டை-தாம்பரம் ரெயிலுக்கு  சாதாரண இருக்கை கட்டணம் ரூ.240
    X

    செங்கோட்டை-தாம்பரம் ரெயிலுக்கு சாதாரண இருக்கை கட்டணம் ரூ.240

    • வருகிற 8-ந்தேதி தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு புறப்பட உள்ள ரெயிலை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.
    • ரெயில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    தென்காசி:

    நெல்லை - தென்காசி இடையே இருந்த மீட்டர் கேஜ் பாதையானது 21.09.2012 அன்று அகலப்பாதையாக மாற்றப்பட்டது.

    இந்த வழித்தடமானது அகலப்பாதையாக மாற்றப்பட்டு 12 ஆண்டுகள் கடந்து விட்டது. ஆனாலும் இன்று வரை அந்த வழித்தடத்தில் சென்னைக்கு நேரடி ரெயில்கள் இல்லாத நிலையே இருந்து வருகிறது.

    இதுதொடர்பாக பயணிகள், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது தாம்பரம் - செங்கோட்டை இடையே வாரத்தில் 3 நாட்கள் இயங்கும் வகையில் புதிய ரெயில் ஒன்று இயக்கப்பட உள்ளது.

    செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு நெல்லை வழியாக இயக்கப்படும் இந்த ரெயில் பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வருகிற 8-ந்தேதி தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு புறப்பட உள்ள இந்த ரெயிலை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

    இந்த ரெயில்(16103) தாம்பரத்தில் இருந்து ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய 3 தினங்களிலும் இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.50 மணிக்கு செங்கோட்டை வந்தடைகிறது. மறுமார்க்கமாக வருகிற 10-ந்தேதி முதல் செங்கோட்டையில் இருந்து திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் வண்டி எண் 16104 என்ற ரெயில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    இந்த ரெயிலில் சாதாரண இருக்கை கட்டணம் ரூ.240, படுக்கை வசதி கட்டணம் ரூ.435, மூன்றாம் வகுப்பு ஏசிக்கு ரூ.1,150, இரண்டாம் வகுப்பு ஏசிக்கு ரூ.1,575 கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    செங்கோட்டை - தாம்பரம் மும்முறை ரெயிலானது பாவூர்சத்திரம், நெல்லை, விருதுநகர், திருவாரூர், மயிலாடுதுறை விழுப்புரம் வழியாக இயக்கப்பட உள்ளது. தற்போது பொதிகை செங்கோட்டை - தாம்பரம் இடையே மதுரை வழியாக 10 மணி 30 நிமிடத்திலும், சிலம்பு எக்ஸ்பிரஸ் 11 மணி நேரத்திலும் கடக்கின்றன.

    புதிதாக இயங்க இருக்கும் இந்த ரெயிலை தனது மொத்த தொலைவான 766 கிலோமீட்டர் தூரத்தை 60 கிலோமீட்டர் வேகத்துடன் 13 மணி நேரத்தில் சென்றடையும் வகையில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கிவைக்க உள்ள இந்த ரெயிலுக்கு தாமிரபரணி எக்ஸ்பிரஸ் என்ற பெயரிட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×