search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கம்பம் அருகே வனப்பகுதியில் நுழைந்த தொழிலாளி சுட்டுக்கொலை- உறவினர்கள் மறியல்
    X

    கம்பம் அருகே வனப்பகுதியில் நுழைந்த தொழிலாளி சுட்டுக்கொலை- உறவினர்கள் மறியல்

    • விவசாய கூலித் தொழிலாளியான ஈஸ்வரன் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் வேலை பார்த்து வந்தார்.
    • உயிரிழந்த ஈஸ்வரனின் உடல் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் மேகமலை-ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் வனக்காப்பகம், கூடலூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட காப்புக்காடு பகுதிகள் உள்ளன. இங்குள்ள வனத்துறையினர் சோதனைச்சாவடி அருகே வண்ணாத்திப்பாறை காப்புக்காடு பகுதியில் வனவர் திருமுருகன் தலைமையில் வனத்துறையினர் இன்று காலை ரோந்து சென்றனர்.

    அப்போது சிலர் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்துள்ளனர். அவர்கள் வனத்துறையினரைக் கண்டதும் தப்பி ஓட முயன்றனர். இதில் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டினார். இதனால் பாதுகாப்புக்காக வனத்துறையினர் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதில் சுருண்டு விழுந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் யார்? என விசாரணை நடத்தப்பட்டது. இதில் இறந்தநபர் குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்த ஈஸ்வரன் (வயது 55) என தெரிய வந்தது. அவருக்கு உமா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    விவசாய கூலித் தொழிலாளியான அவர் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் வேலை பார்த்து வந்தார். அத்துமீறி காப்புக்காட்டுக்குள் நுழைந்ததால் வேட்டைக்கு வந்தாரா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உயிரிழந்த ஈஸ்வரனின் உடல் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது அவரது உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் மறியலுக்கு முயன்றனர்.

    அதனைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் லோயர் கேம்ப் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஈஸ்வரனின் உடல் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேத பரிசோதனை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்உமேஷ் டோங்கரே ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், தொழிலாளி ஈஸ்வரன் வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்தார். மேலும் வனத்துறையினரை கண்டதும் கத்தியை காட்டி மிரட்டி தாக்க முயன்றார். இதனால் வனத்துறையினர் தங்களின் பாதுகாப்புக்காக அவரை சுட்டுக் கொன்றனர். அவருடன் வந்த சிலரையும் தேடி வருகின்றோம். காப்புக்காட்டுக்குள் பொதுமக்கள் வர அனுமதி இல்லை. வேட்டையாடும் கும்பல் அதிகளவில் வருவதால் வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். எனவே இது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்றனர்.

    வனப்பகுதியில் நுழைந்த தொழிலாளி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    Next Story
    ×