search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கொலு பொம்மைகள் விற்பனை மந்தம்- விற்பனையாளர்கள் பாதிப்பு
    X
    செங்கோட்டை பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள கொலு பொம்மைகள்.

    கொலு பொம்மைகள் விற்பனை மந்தம்- விற்பனையாளர்கள் பாதிப்பு

    • ராமர் திருமண நிகழ்வு, யோகா செட், தலைவர்களின் பொம்மைகள் என பல வகைகளில் அரை அடி முதல் இரண்டரை அடி வரை விற்பனைக்கு தயாராக உள்ளன.
    • கொரோனா பாதிப்புக்கு பின் பொம்மை உற்பத்தி செய்ய இந்த ஆண்டு தொழிலாளர்கள் முன்வந்துள்ளதால் புதிதாக அதிகளவில் பொம்மைகள் வந்துள்ளன.

    செங்கோட்டை:

    தமிழகத்தில் முப்பெரும் தேவியரை போற்றும் வகையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு வருகிற 26-ந்தேதி நவராத்திரி விழா தொடங்க உள்ளது.

    விழாவையொட்டி கோவில்கள், வீடுகள், வர்த்தக நிறுவனங்களில், கொலு வைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு செங்கோட்டை பகுதிக்கு ஆந்திர மாநிலம் சித்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வண்ணமிகு அழகான கண்களை கவரும் வகையில் கொழு பொம்மைகள் விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதில் ஈடுபட்டுள்ள தங்கமணி கூறியதாவது:-

    கொழு பொம்மைகள் அனைத்தும் களி மண்ணால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் தசாவதாரம், திருவிளையாடல் புராணம், ராமர் பட்டாபிஷேகம், கள்ளழகர் திருமண கோலம், மதுரை மீனாட்சி கோவில், திருப்பதி பிரமோத்சவம் போன்ற பொம்மைகள் செட், சுவாமி சிலைகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் அடியார்களின் சிலைகள், பல்வேறு கலாசார நிகழ்வுகளை வெளிப்படுத்தும் கல்யாண செட், தறி நெய்தல், மண்பாண்டம் செய்தல், குறவன் குறத்தி, அஷ்ட லட்சுமி செட், வளைகாப்பு, கல்யாண செட், அம்மன் சிலைகள், ராமர் திருமண நிகழ்வு, யோகா செட், தலைவர்களின் பொம்மைகள் என பல வகைகளில் அரை அடி முதல் இரண்டரை அடி வரை விற்பனைக்கு தயாராக உள்ளன.

    இதுதவிர கொலுவில் வரிசைப்படுத்துவதற்காக, பறவைகள், விலங்குகள் மற்றும் பழங்களின் பொம்மைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன. பொம்மைகளின் வேலைப்பாடு மற்றும் வடிவத்துக்கு ஏற்ப, ரூ. 50 முதல், ரூ. 4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

    கொரோனா பாதிப்புக்கு பின் பொம்மை உற்பத்தி செய்ய இந்த ஆண்டு தொழிலாளர்கள் முன்வந்துள்ளதால் புதிதாக அதிகளவில் பொம்மைகள் வந்துள்ளன. ஆனால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புபோல் ஆர்டர்கள் எதிர்பார்த்த அளவில் இல்லை.

    வழக்கமான வியாபாரிகளை, பொம்மை தயாரிப்பாளர்கள் தொடர்பு கொண்டு பொம்மைகளை அனுப்புகின்றனர். இருந்தும், நவராத்திரி விழா வரும் 26-ந்தேதி தொடங்க உள்ளததையடுத்து எதிர்பார்த்த விற்பனை தொடர்ந்து மந்தமாக உள்ளது.

    செங்கோட்டை சுற்றுப்புற பகுதி மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் அதிகளவில் பொம்மைகளுக்கு ஆர்டர் கொடுத்து, வாங்கி செல்வார்கள். ஆனால் 2 ஆண்டுகளாக ஆர்டர்கள் கிடைக்காமல் தற்போது விற்பனை மந்தமாக உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    Next Story
    ×