என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

விருத்தாசலத்தில் மருமகள் மீது ஆசிட் ஊற்றி கொலை செய்ய முயற்சித்த மாமியார் கைது
- கிருத்திகாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய புதுவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
- விருத்தாசலம் போலீசார் கிருத்திகாவின் மாமியார் ஆண்டாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் கடலூர் சாலையில் முகேஷ்ராஜ் வசித்து வருகிறார். இவருக்கும் கிருத்திகா (வயது 23) என்பவருக்கும் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளது. முகேஷ்ராஜ் அவிநாசியில் வேலை செய்து வருகிறார். இவரது தாயார் ஆண்டாள் (55). இவருக்கு இவரது மருமகள் கிருத்திகாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கிருத்திகா இன்று அதிகாலையில் வீட்டில் படுத்து உறங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டு கழிவறையில் இருந்த ஆசிட்டை எடுத்த வந்த மாமியார் ஆண்டாள், உறங்கிக் கொண்டிருந்த கிருத்திகா மீது ஊற்றினார். இதில் முகம், கண், காது, உடல், மர்ம உறுப்புகளில் ஊற்றினார். மேலும், கொசு விரட்டி மருந்தை வாயில் ஊற்றி கிருத்திகாவை கொலை செய்ய முயற்சி செய்தார். அப்போது கிருத்திகாவின் அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, கிருத்திகாவை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்த போது ஆசிட் ஊற்றப்பட்டதால் கிருத்திகாவின் வலது கண் பார்வை இழந்ததை கண்டறிந்தனர். இதையடுத்து கிருத்திகாவிற்கு அறுவை சிகிச்சை செய்ய புதுவை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பான புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் கிருத்திகாவின் மாமியார் ஆண்டாளை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






