search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தாய்-மகன் எரித்து கொலை: குற்றவாளியை கவ்வி பிடித்த மோப்ப நாய்
    X

    கொலை குற்றவாளி ராமதாசை கவ்வி பிடித்த மோப்பநாயை காணலாம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தாய்-மகன் எரித்து கொலை: குற்றவாளியை கவ்வி பிடித்த மோப்ப நாய்

    • சொத்தில் பங்கு வேண்டும் என்று சத்யா கணவரிடம் கூறினார்.
    • செந்தாமரைக்கண்ணன் என்னுடைய இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்து விட்டு சென்றார்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே, செங்கல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செந்தாமரை கண்ணன் (வயது55).தெருக்கூத்து நாடக கலைஞர். இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளது.

    முதல் மனைவி செல்வி, கருத்து வேறுபாட்டால் கணவரை பிரிந்து, தன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இரண்டாவது மனைவி கமலா (வயது50), அவரது மகன் குரு (17). இருவரும் செங்கல்பட்டியிலுள்ள ஓட்டு வீட்டில் வசித்து வந்தனர். 3-வது மனைவி சத்யா. இவர் தற்போது கோவையில் தங்கி கட்டிட வேலை செய்து தந்தை காவேரி, தாய் சாலா ஆகியோருடன் வசித்து வந்தார்.

    நேற்று முன்தினம் காலை பூட்டிய வீட்டுக்குள் கமலா, குரு ஆகியோர் தீயில் கருகி சடலமாக கிடப்பதாக, கல்லாவி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கிருஷ்ணகிரி கூடுதல் எஸ்.பி. சங்கு, ஊத்தங்கரை டி.எஸ்.பி. அலெக்சாண்டர், கல்லாவி இன்ஸ்பெக்டர் பத்மாவதி மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    அப்போது எரிந்த நிலையில் கிடந்த தாய்-மகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது சத்யாவுக்கும், திருப்பத்தூர் மாவட்டம், கூறிசலாபட்டு பகுதியை சேர்ந்த ராமதாஸ் (37) இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது தெரியவந்தது.

    கொலை நடந்த மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அங்கு அந்த மோப்பநாய் செந்தாமரைக்கண்ணன் வீட்டின் ஜன்னல் பகுதிக்கு சென்று மோப்பம் பிடித்தது. பின்னர் அங்கிருந்து சிறிது தூரம் உள்ள சத்யா வீட்டில் இருந்த ராமதாஸ் வேட்டியை கவ்வி பிடித்தது. இதனால் அவர் போலீசில் மாட்டி கொண்டார்.

    அப்போது ராமதாஸ் போலீசில் வாக்குமூலம் கொடுத்தார்.

    எனக்கும், சத்யாவுக்கு இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதனை செந்தாமரைக்கண்ணன், சத்யாவை கண்டித்துள்ளார். இதனால் நானும், சத்யாவும் செங்கப்பட்டிக்கு வந்தோம். அப்போது சொத்தில் பங்கு வேண்டும் என்று சத்யா கணவரிடம் கூறினார். அப்போது என்னையும், சத்யாவையும் செந்தாமரை கண்ணன் கண்டித்தார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த செந்தாமரைக்கண்ணன், என்னுடைய இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்து விட்டு சென்றார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அந்த தீயை அணைத்தனர்.

    பின்னர் செந்தாமரைக்கண்ணன் வீட்டிற்குள் சென்று விட்டார். அவரை கொலை செய்ய திட்டமிட்டு நான் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் சென்று பெட்ரோல் வாங்கி விட்டு வீட்டிற்கு வந்தேன். பின்னர் செந்தாமரைக்கண்ணன் வீட்டின் கதவை வெளிபக்கமாக பூட்டி ஜன்னல் வழியாக பெட்ரோல் ஊற்றி தீ வைத்தேன்.

    பின்னர் நானும் எதுவும் தெரியாதபடி சத்யாவின் வீட்டில் இருந்தேன். மறுநாள் காலையில் தான் தாய்-மகன் இருவரும் உடல் கருகி உயிரிழந்தது தெரியவந்தது. ஆனால் வீட்டில் செந்தாமரைக்கண்ணன் அங்கு இல்லை என தெரியவந்தது.

    காலையில் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். நான் எதுவும் தெரியாது என கூறினேன். மோப்பநாய் வந்து என் வேட்டியை கவ்வி பிடித்தது. இதனால் நான் மாட்டி கொண்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது தொடர்பாக கல்லாவி போலீசார் வழக்குபதிவு செய்து ராமதாஸ், சத்யா, காவேரி, சாலா ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    Next Story
    ×