search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தூத்துக்குடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வர ஆலோசனை: அமைச்சர் கே.என்.நேரு
    X

    தூத்துக்குடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வர ஆலோசனை: அமைச்சர் கே.என்.நேரு

    • நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டத்தில் நூற்றுக்கு 75 சதவீதம் குடி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • தமிழகத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் பணிகள் சரியாக நடைபெறவில்லை என்று கூறுவது தவறு.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் குடிநீர் வழங்கல் தொடர்பான ஆலோசனை கூட்டம் அதிகாரிகளுடன் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் கே.என். நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் இன்று நெல்லை மாவட்டத்திற்கு வந்துள்ளேன். தென் மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது? எந்தெந்த இடங்களில், எந்தெந்த பணிகளை செய்ய வேண்டும் என்பது தொடர்பாக துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டத்தில் நூற்றுக்கு 75 சதவீதம் குடி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர கடந்த 20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட குடிநீர் குழாய்கள் பழுதடைந்துள்ளன. அவை புதிதாக மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இது தவிர புதிய மின் மோட்டார்களும் பொருத்தப்பட்டு வருகிறது.

    மழை பொய்த்த காலத்தில் குடிதண்ணீர் பிரச்சினையை சமாளிக்கும் வகையில் தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வர ஆலோசனையில் உள்ளது.

    காவிரி ஆற்றின் மூலம் ரூ.4,800 கோடி மதிப்பில் திண்டுக்கல், ராமநாதபுரம், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் வழங்கும் திட்டப்பணிகள் நடந்து வருகிறது.

    இது தவிர கடலோர மாவட்டங்கள் வழியாக குழாய் பதித்து குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    தமிழகத்தில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில் பணிகள் சரியாக நடைபெறவில்லை என்று கூறுவது தவறு. மத்திய அரசே இந்த திட்டத்தை தமிழகத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்தியதற்காக எனக்கு விருது வழங்கியுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் ஊராட்சி பகுதியான ராதாபுரம் தொகுதியில் ரூ.65 கோடியில் குடிநீர் வழங்கும் திட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தொடங்கி 3 மாதங்கள் முடிவடைந்து விட்டன. இன்னும் 15 மாதங்களில் அந்த பணிகள் முடிவடையும். அதற்கு முன்பாகவே ஒரு மாதத்தில் தற்காலிகமாக வேறு ஒரு திட்டத்தில் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்க பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த திட்டம் நிறைவேறிய பின்னர் இடையன்குடி, விஜயாபதி, கூடங்குளம் உள்ளிட்ட 11 கிராமங்கள் குடிநீர் வசதி பெறும்.

    நெல்லை மாநகர பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் திறப்பு விழா காணப்பட்ட பாளை பல்நோக்கு அரங்கம், பேட்டை சரக்கு முனையம் உள்ளிட்டவை விரைவில் செயல்பட தேவையான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×