என் மலர்
தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1 லட்சத்து 8 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
- ஒகேனக்கல் காவிரியில் இரு கரைகளையும் தொட்டபடி வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது.
- மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
மேட்டூர்:
தென்மேற்கு பருவமழையால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால் ஒகேனக்கல்லில் தற்போது 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வருகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து வினாடிக்கு கொட்டுகிறது. நீர்வரத்து அதிகமாக உள்ளதால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும், காவிரிகரைக்கு செல்லவும் 6-வது நாளாக தடை நீடிக்கிறது.
ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
மேலும் பிரதான அருவி செல்லும் நடை பாதை, மாமரத்து கடவு பரிசல் துறை, முதலைப்பண்ணை, ஆலம்பாடி உள்பட காவிரி கரையோர பகுதிகளில் வருவாய்துறையினர், ஒகேனக்கல் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஒகேனக்கல் காவிரியில் இரு கரைகளையும் தொட்டபடி வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 85 ஆயிரத்து 129 கன அடிநீர் வந்தது.
இந்த நிலையில் இன்று காலை 8 மணியளவில் 82 ஆயிரத்து 642 கன அடி வீதம் தண்ணீர் அணைக்கு வந்தது. பின்னர் படிப்படியாக நீர்வரத்து அதிகரித்து12 மணியளவில் வினாடிக்கு 1 லட்சத்து 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து காவிரியில் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து மிக குறைந்த அளவிலேயே தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து வருகிறது.
நேற்று 110.14 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணியளவில் 113.96 அடியாக உயர்ந்தது. தொடர்ந்து மதியம் 12 மணிக்கு 114.96 அடியாக உயர்ந்தது. இதனால் ஒரே நாளில் மேலும் 5 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இனி வரும் நாட்களில் இதே அளவு தண்ணீர் வந்தால் 3 நாட்களில் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளாவான 120 அடியை மீண்டும் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.