என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேட்டூர் அணையில் இருந்து இன்னும் 5 நாட்களுக்கு மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியும்
- தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
- கர்நாடக அணைகளில் இருந்தும் தண்ணீர் 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
சேலம்:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. பாசன தேவைக்கு ஏற்ப அணையில் இருந்து தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை கை கொடுக்காததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. மேலும் பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததாலும் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென குறைந்தது.
இந்த நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. அதே நேரம் கர்நாடக அணைகளில் இருந்தும் தண்ணீர் 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது.
தற்போது தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததாலும், கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டதாலும் அணைக்கு நீர்வரத்து குறைந்து காணப்படுகிறது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 37.05 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 524 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 6 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 10.8 டி.எம்.சி.தண்ணீர் மட்டுமே உள்ளது. மீன் வளம் மற்றும் குடிநீர் தேவைக்கு 6 டி.எம்.சி. தண்ணீர் அணையில் தேக்கி வைக்கப்படும். மீதி உள்ள 4.8 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே பாசனத்துக்கு திறக்கப்படும். தற்போது திறக்கப்படும் தண்ணீரே தொடர்ந்து வெளியேற்றப்பட்டதால் காவிரி டெல்டா பாசனத்துக்கு இன்னும் 5 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்க முடியும் சூழல்நிலை உருவாகி உள்ளது.






