search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மதுரையில் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்த பழ வியாபாரி கைது
    X

    மதுரையில் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்த பழ வியாபாரி கைது

    • சிறுமிக்கு வெற்றிவேல் முருகன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
    • சிறுமியின் உடலில் பல இடங்களில் சிகரெட்டால் சூடு வைத்தது மற்றும் அடித்ததற்கான காயங்கள் இருந்தன.

    மதுரை:

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை சேர்ந்தவர் குருநாதன். இவரது மகன் வெற்றிவேல்முருகன் (வயது 28). இவர்கள் இருவரும் மதுரையில் வீடு எடுத்து தங்கி பழ வியாபாரம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 17 வயது சிறுமியை வெற்றிவேல் முருகன் திருமணம் செய்து தனியாக வசித்து வந்தார். அவருக்கு கஞ்சா மற்றும் மது பழக்கம் இருந்ததால், போதையில் சிறுமியை பாலியல் சித்ரவதைக்கு உள்ளாக்கி இருக்கிறார்.

    அதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்தபோதிலும் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தபடி இருந்துள்ளார். சம்பவத்தன்று இரவும் சிறுமிக்கு வெற்றிவேல் முருகன் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிறுமியை சரமாரியாக தாக்கி, வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு தப்பி சென்று விட்டார்.

    கணவரின் சித்ரவதை தாங்காமல் அந்த சிறுமி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து தல்லாகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று வெற்றிவேல் முருகன் வீட்டின் பூட்டை உடைத்து சிறுமியை மீட்டனர்.

    அப்போது சிறுமியின் உடலில் பல இடங்களில் சிகரெட்டால் சூடு வைத்தது மற்றும் அடித்ததற்கான காயங்கள் இருந்தன. அதுகுறித்து போலீசார் விசாரித்தபோது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெற்றிவேல் முருகன் தன்னை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து குடித்தனம் நடத்தி வந்ததாகவும், போதையில் பாலியல் சித்ரவதை செய்ததாகவும் தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து சிறுமியை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். சிறுமி சித்ரவதைக்கு உள்ளானது குறித்த புகாரின்பேரில் வெற்றிவேல் முருகன் மீது குழந்தை திருமணம், போக்சோ உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர்.

    தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் வெற்றிவேல் முருகன் மதுரை அண்ணாநகரில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தல்லாகுளம் போலீசார் அங்கு சென்று அந்த வீட்டை சுற்றிவளைத்தனர்.

    பின்பு வீட்டுக்குள் இருந்த வெற்றிவேல் முருகனை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×