search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நேர்முகத்தேர்வு நடத்தாமல் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் நியமனம்- அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
    X

    நேர்முகத்தேர்வு நடத்தாமல் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் நியமனம்- அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

    • குறிப்பிட்ட சிலரை மட்டும் பணிக்கு நியமித்து உத்தரவிட்டு உள்ளனர்.
    • பணி நியமனங்களை ரத்து செய்துவிட்டு நேர்முக தேர்வு நடத்தி விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிதாக பணி நியமனங்களை மேற்கொள்ளும்படி உத்தரவிட வேண்டும்.

    மதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையை சேர்ந்த நித்யா. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

    கடந்த 9.9.2022 அன்று குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் உதவியாளர் பணி நியமனம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அந்த அறிவிப்பின்படி நான் அந்த பணிக்கு விண்ணப்பித்து இருந்தேன்.

    அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி நேர்முகத் தேர்வுக்காக அழைத்திருந்தனர். குஜிலியம்பாறை வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு நான் கல்வி சான்றிதழ்களுடன் சென்றிருந்தேன். என்னுடைய கல்வி சான்றிதழ்களை அங்கு பெற்றுக் கொண்டனர். என்னை போலவே அங்கு வந்த பலரிடமும் நேர்முகத் தேர்வை நடத்தாமல் சான்றிதழ்களை மட்டும் பெற்றுக் கொண்டனர்.

    பின்னர் குறிப்பிட்ட சிலரை மட்டும் அந்த பணிக்கு நியமித்து உத்தரவிட்டு உள்ளனர். நேர்முக் தேர்வே நடத்தாமல் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு பணி நியமனம் அளித்து இருப்பது ஏற்புடையதல்ல.

    எனவே அந்தப் பணி நியமனங்களை ரத்து செய்துவிட்டு நேர்முக தேர்வு நடத்தி விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிதாக பணி நியமனங்களை மேற்கொள்ளும்படி உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் சுந்தர் ஆஜராகி, விண்ணப்பித்தவர்களுக்கு உரிய முறையில் தேர்வு நடத்தாமல் முறை கேடாக பணி நியமனம் அளித்திருப்பது சட்ட விரோதம். அந்த பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

    விசாரணை முடிவில் மனுதாரரின் மனுவை பரிசீலித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    Next Story
    ×