என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்.
காலை உணவு திட்டத்தில் ஊழியர் பற்றாக்குறை- மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்கள்
- பணியாளர் பற்றாக்குறையால் காலை உணவு தயாரிப்பதில் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.
- சுக்காம்பட்டியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை வகுப்புக்கு அனுப்பாமல் புறக்கணிப்பு செய்தனர்.
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை, அய்யலூர் பகுதியில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் தமிழக அரசின் காலை உணவு திட்ட சமையலர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் மகளிர் சுயஉதவிக்குழுவை சேர்ந்தவர்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனரின் வழிகாட்டுதலின்படி பணியாட்களை நியமிக்க வேண்டும்.
அய்யலூர் பேரூராட்சியில் காலை உணவு திட்ட சமையலர் பணிக்கு லஞ்சம் பெற்று வசூல் வேட்டையில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து கைது செய்ய வேண்டும். காலை உணவு திட்ட சமையலர் பணியில் மாணவர்களின் பெற்றோருக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். பணியாளர் பற்றாக்குறையால் காலை உணவு தயாரிப்பதில் பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது என அதில் தெரிவித்திருந்தது.
இதனையடுத்து சுக்காம்பட்டியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களை வகுப்புக்கு அனுப்பாமல் புறக்கணிப்பு செய்தனர். சுக்காம்பட்டி, பூசாரிபட்டி, குரும்பபட்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாணவர்களை மந்தையில் அமரவைத்து நகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்களின் பெற்றோர்களிடம் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருந்தபோதும் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் அவர்கள் போராட்டம் நடத்தினர்.






